Wednesday, March 18, 2020

பிரதேசவாத மற்றும் மதவாத அரசியலால் த.தே-கூ தமிழ் மக்களை பிளவுபடுத்தியுள்ளது என்கிறார் சிவகரன்

சந்தர்ப்பவாத இணக்க அரசியலினை மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் மூலம் தமிழ் மக்களின் இருப்பை மிகமோசமாக பலவீனப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்:

இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ்த் தேசிய அரசியலின் தற்கொலைக்கு சமனானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியம் என்பது மதம், சாதீயம் பிரதேசவாதம் போன்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடலாகாது. கடந்த பல தசாப்தமாக தமிழ்த் தேசிய இருப்பியல் பல சூழ்ச்சிகளையும் சந்தர்ப்பவாதங்களையும் காட்டிக்கொடுப்பு, கயமைத்தனங்களையும் கடந்தே தமிழ்த் தேசியம் நிலை கொண்டது.

2009 வரை வலிமையடைந்திருந்த தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்த கூட்டமைப்பு சந்தர்ப்பவாத இணக்க அரசியலின் மூலம் தமிழ்த் தேசியத்தை நலிவடையச் செய்ததுடன் புலி நீக்க அரசியல் தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என சிறுமைப்படுத்தியதுடன் வழிப்போக்கர்களுக்கு வழிவகுக்கும் கூடாரமாகவே தமிழ்த் தேசிய அரசியலை களம் அமைக்கிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

தமிழ் மக்களை பல கூறுகளாக பிளவு பட வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே சாரும். மத ரீதியாகவும் பிளவடைந்துள்ளன. அரசாங்கத்தின் பெருவிப்பை கூட்டமைப்பின் பலவீனத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிகமோசமாக பலவீனப்படுத்தும் செயலாகும்.

இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ்த் தேசிய அரசியலின் தற்கொலைக்கு சமனானது ஆகும். மிகச் சாதாரணமான விடயமாகிய திருக்கேதீஸவர வளைவு விடயத்தை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குகின்றோம் என சொல்கின்ற கூட்டமைப்பு சரியான அனுகுமுறையை ஏற்படுத்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டிந்தால் இத்தகைய விழைவு ஏற்பட்டிருக்காது.

இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு மத முரன்பாடு என்பது மன்னாரில் அதிகமாக காணப்படுவது யாவரும் அறியாமல் இல்லை. இந்த முரன்பாட்டை அரசியல் தலைமைகள் சீர் செய்திருக்க வேண்டும். அவர்கள் காலத்திற்கு காலம் பிரிந்தாளும் அரசியலையே கையாண்டனர் அதன் விளைவே இப்போது பூதாகரமாகியுள்ளது. அதற்காக மதரீதியாக தேர்தலில் போட்டியிடுவது என்பது முற்றிலும் தவறானது ஆகும் இது நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துவதுடன் மத ரீதியான முரன்பாட்டையும் மிக மோசமாக அதிகரிப்பதுடன் தமிழ்த் தேசியத்தை நலிவடையச் செய்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் என்றார்.

No comments:

Post a Comment