Tuesday, January 28, 2020

எனக்கு உத்தரவிட உங்களுக்கு அதிகாரமில்லை! ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு காதைப்பொத்தி கொடுத்தார் சட்ட மா அதிபர்.

இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரமோ சட்டத்தின் நீதியின் பிரகாரமோ சட்ட மா அதிபருக்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவு கிடையாது என சட்ட மா அதிபர் தப்புல த லிவேரா தெரிவித்துள்ளார்.

அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக அவரால் எழுதப்பட்டுள்ள நீண்ட கடிதம் ஒன்றில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று (27) சட்டமா அதிபருக்கு அறிவித்திருந்தது.

அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளால் பல்வேறு அசௌகரியர்களை எதிர்நோக்கியுள்ளதாக அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவால் முறைப்பாடு குறித்த விசாரணைக்கு முன்னர் அவர்களுக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதால் முறைப்பாட்டாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி முறைப்பாட்டாளர்களின் அரசியல் அழுத்தங்கள் மீதான வழக்கு விசாரணை சம்பந்தமாக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் முன்னிலையாவதா? இல்லையா? என தீர்மானிக்கும் வரை வழக்கு விசாரணையை நடத்துவது மற்றும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment