Tuesday, January 28, 2020

சட்டதிட்டங்களின் அசமந்த போக்கினால் புலிகள் விடுதலை!

நல்லாட்சி அரசாங்கம் செய்துவந்த அதே கூத்து, ராஜபக்ஷ அரசாங்கத்திலும் அரங்கேறி வருகின்றது என்பது நாள்தோறும் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளின் மூலம் மெல்லக் கசிந்துவரும், அரசாங்கத்தை உருவாக்குவதற்குக் காலாக நின்றோரால் ஏற்றுக் கொண்டும் கக்கவும் விக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ள கசப்பான உண்மையாகும்.

இந்தவகையில், குற்றம் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளில் முக்கிய இடத்திலிருந்த சிலர் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் கபிலன், மலேசியா ராஜன் பதுமன் என்றழைக்கப்பட்ட சிவ சுப்ரமணியம், வரதநாதன், குசாந்தன் மாஸ்டர், சேரா அம்மான், நகுலன் வவுனியா நாதம் என்போர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரச கரும மொழிகளாக சிங்களத்தோடு தமிழ் இருக்கின்ற போதும், மொழிகளில் பரிச்சயமின்மையாலும், தட்டுத்தடுமாற்றத்தினாலும் சிலரின் பெயர்கள் மாற்றலாக எழுதப்பட்டு இருப்பதனால் குற்றவாளிகள் இலேசாக விடுதலையாகியுள்ளனர். சிவசுப்ரமணியம் வரதநாதன் என்ற பெயருக்குப் பதிலாக பதுமன் என்ற பெயரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததனால், குறித்த புலி உறுப்பினர் விடுதலையாகியுள்ளார்.

மிகவும் சிரமப்பட்டு, இராணுவம் இவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்த போதும், கணிப்பீட்டின்படி 2015 ஆம் ஆண்டு வெலிக்கடை ஜே மற்றும் ஜீ சிறைக்கூடங்களில் முன்னாள் புலி உறுப்பினர்கள் 108 பேர் இருந்துள்ளனர். தற்போது புலி உறுப்பினர்கள் 40 பேர் மட்டுமே உள்ளனர் எனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment