Saturday, October 19, 2019

ரவூப் ஹக்கீம் சஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வீடியோ வெளியானது. கைது செய்யக்கோரி பொலிஸில் முறைப்பாடு

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவனுடன் 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தின்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வீடியோ பதிவு ஒன்று வைரலாகியுள்ளதுடன் குறித்த வீடியோவை கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்த குழு வொன்று அவரை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

முறைப்பாட்டை பதிவு செய்த முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

பயங்கரவாதியான சஹ்ரானுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பெயரில் பலர் கைது செய்யப்பட்;டுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறியளவிலேயே அவனுடன் தொடர்பினை பேணியுள்ளனர். ஆனால் மக்கள் பிரதிநிதியாக பெரும் பதவிகளில் இருந்து கொண்டு சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த பெரும்புள்ளிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே ரவூப் ஹக்கீம் உடனடியாக கைது செய்யப்பட்டு அவருக்கு சஹ்ரானுடனிருந்த உறவு தொடர்பாக விசாரணை செய்யப்படவேண்டும் என்று அந்த அமைப்பினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் அக்கரைப்பற்றில் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா சஹ்ரானுடன் 2000 வாக்குகளுக்காக பேச்சுவார்த்தை நாடாத்தி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் காட்டிக்கொடுத்திருந்தார் என குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment