Wednesday, October 2, 2019

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 1.30 மணி வரையில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குடிவரவு மற்றும் குடியகழ்வு பணிப்பாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரசாங்க பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள குடியுரிமை சான்றிதல் சட்டத்தின் முன் செல்லுபடியற்ற ஆவணம் என தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் குடியுரிமை சான்றிதலை வழங்கும் அதிகாரம் விடயப்பொறுப்பான அமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை சான்னிறதல் விடயப் பொறுப்பு அமைச்சரினால் வழங்கப்படாது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அது சட்டவிஶோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த வழக்கு நாளை மதியம் 1.30 மணியளவில் ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment