Tuesday, September 3, 2019

துயரத்திலிருந்து அதிகம் அதிகம் கற்றுக்கொண்டாராம் ரணில் விக்கிரமசிங்கே.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட துயரமான அனுபவத்தில் இருந்து இலங்கை அதிகமாக கற்றுக்கொண்டதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு நாடாளுமன்றில் இன்று (03) விசேட உரையாற்றினார்.

அதன்போது, இந்த விடயங்களை கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “பயங்கரவாதத்தால் 25 வருடங்கள் நாங்கள் துன்பத்தை அனுபவித்தோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் வழிநடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது, வழமையான பயங்கரவாத தாக்குதலை விட பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளது. இந்த துயரமான அனுபவத்தில் இருந்து நாங்கள் அதிகமாக கற்றுக்கொண்டோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு பிராந்தியம் என்ற ரீதியில் அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராக உள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் இன்று நம் அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உங்கள் தீவு நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

கடல் மட்ட உயர்வு மற்றும் பச்சை வீட்டு விளைவுக்கு எதிராக போராடும் உங்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச மாநாட்டில் கவனம் செலுத்துமாறு மாலைதீவு ஜனாதிபதி சோலிக்கு நான் முன்மொழிகிறேன்.” என்றார்.

No comments:

Post a Comment