Friday, September 6, 2019

எல்பிடியில் பஸ் ஒன்றுக்கு துப்பாக்கிச் சூடு! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!

எல்பிடிய - அழுத்கம பிரதான வீதியில் அழுத்கமவிலிருந்து எல்பிடிய வரை பயணித்த இபோச பஸ் வண்டியில் பயணித்த பயணியொருவருக்கு அதே வண்டியில் பயணித்த மற்றொருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளார் என எல்பிடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை எல்பிடிய அட்டகோட்டை பாழடைந்த இடமொன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊரகஸ்மங்ஹந்திய வல் இங்குருகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஜயவர்தன (41) என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார். வழக்கொன்றிற்காக இறந்த நபரும் அவரது மனைவியும் எல்பிடிய நீதிமன்றத்திற்குச் செல்லும் போதே இந்த சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிகழ்வின் பின்னர் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய சந்தேகநபர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ் வண்டியின் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவருடன் வேகமாக சென்று தலைமறைவாகியுள்ளார் எனவும், குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment