Tuesday, August 27, 2019

சபாநாயகர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! - கரு

சபாநாயகர் தனது பதவியிலிருந்து பதவி விலகப் போகின்றார் என்ற செய்தி மிகப் பொய்யான செய்தி என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள செய்தியாவது:

‘2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த சட்ட விரோத செயல், ஜனநாயகத்திற்கெதிராக செயற்படுதல் போன்றன மீண்டும் நடைபெற்றால் சபாநாயகர் தனது பதவியிலிருந்து பதவி விலகுவார் என (2019.08.26) சில அச்சூடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இது முழுமையாக ஜோடிக்கப்பட்ட பெரும் பொய்யாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

சபாநாயகர் ஒருபோதும் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை என்பதுடன், அவ்வாறான கருத்தினை வெளியிடவில்லை என்பதையும் தெளிவுறுத்துகின்றோம்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கு எதிராகவும் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ள வேண்டிய உச்ச நடவடிக்கையினை எடுப்பதற்கு ஒருபோதும் பின்நிற்காமல் உறுதியாக சபாநாயகர் நிற்பார்.

எது எவ்வாறாயினும், மேற்குறிப்பிடப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ள ஊடகங்கள் அவற்றின் அனுமானத்தின்படியே அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன என்பது தெரிகின்றது. அதனால் அவ்வாறானதொரு நிலை மீண்டும் நாட்டில் இடம்பெற மாட்டாது என்பதில் சபாநாயகர் நம்பிக்கையுடன் உள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment