Friday, August 2, 2019

நாடுகடந்த தமிழீழத்துடன் இணைந்து ஹக்கீம் சமஸ்டி கேட்கின்றாராம். சாடுகின்றார் அதாவுல்லா

இலங்கை ஒரு சிறிய நாடு. இங்கு 9 மாகாணங்களும் சமஸ்டி கோரி நின்றால் இந்த நாடு பாதாளத்திற்கு செல்லும். இதனால்தான் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இந்த சமஸ்டியை எதிர்க்கின்றனர். ரவூப் ஹக்கீம் நாடு கடந்த தமிழீழ அமைப்புகள் டயஸ்போரா போன்றோர்களின் ஊதுகுழலாக சமஸ்டியை கோரி செயற்படுகின்றார் எனச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா.

தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவாகிய சப்றாஸ் மன்சூர் கௌரவிப்பு விழா அண்மையில் கல்முனை பிரதான வீதி நகர மண்டபத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது உரையில்,

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ரவூப் ஹக்கீமே! உங்களுக்கு தமிழ் மணம் தெரியாது. நீங்கள் கண்டியில் பிறந்தவர்.

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை. மஹிந்த ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தார். அது எப்போது என்றால், இந்தப் பகுதியிலே இருக்கின்ற தொழில்நுட்பக் கல்வி பயிற்சி கல்லூரிகளை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்து திறந்து வைக்க வந்த போது இவ்வாறு கூறினார்.

அது போன்று எங்களுக்கு என்று ஒரு வெளிநாட்டுக் கொள்கை வேண்டும். மேலை நாட்டவர்களின் குப்பை தொட்டி அல்ல இலங்கை. இலங்கையை தங்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தியவர்கள் பல நாடுகளை இல்லாமல் செய்தது எனக்கு தெரியும். அந்த நாடுகளின் நிலைமை தற்போது மோசமாக இருக்கின்றது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரு வலயமாக மாற்ற வேண்டும்.

இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் தீர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தனியான அலகுகோரி நிற்கவில்லை. இந்த நாட்டில் 75 வீதமான இதர சிங்கள பௌத்த மக்கள் இருக்கிறார்கள். 25 விதமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். ஆகவே 25 வீதமாக இருக்கின்ற சிறுபான்மை மக்களை வாழ வைப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இந்த நாட்டிலே ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல் வரும் போதும் பாரிய குழப்பங்கள் வருகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் சர்வதேச சக்திகள். இங்கு மீனவர்கள் மீன்பிடி படகுகளை தரித்து நிற்க செய்வதற்கு எம்மிடம் இடம் இல்லை. ஆனால் இலங்கையில் அழகு மிகுந்த பொக்கிஷமான திருகோணமலையை கபளீகரம் செய்ய அமெரிக்கா முனைகிறது.

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கோடீஸ்வரன், இருக்கின்ற சபையிலே நான் பகிரங்கமாக தெரிவித்தேன், கல்முனையில் நான்கு உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் என்று அதனை சம்பந்தன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயர்பீட உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment