Tuesday, August 6, 2019

கோத்தா வேட்பாளர் என்பது உறுதி. ஓய்வு பெற்ற இராணுவத்தினரை கொண்டு சிறப்பு பாதுகாப்பு பிரிவு அமைக்க திட்டம்.

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெருமுன சார்பான வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வை நிறுத்துவது என்ற முடிவு நிறைவு பெற்றுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியமுடிகின்றது.

உள்ளக வெளியக பல்வேறு சாவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு தொடர்பில் எதிர்வரும் 11ம் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபச்ச அறிவிக்கவுள்ளார்.

இதேநேரம் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளராக போட்டியில் நிறுத்தவுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க, தனியான தொண்டர் படை ஒன்றை உருவாக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

கட்சியின் பேச்சாளர் ஒருவர் இதுபற்றி தகவல் வெளியிடுகையில்,

“பாதுகாப்புப் படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 50 அதிகாரிகளைக் கொண்டு இந்த தொண்டர் படை உருவாக்கப்படவுள்ளது. இவர்கள் படைகளில் இருந்து சட்டரீதியாக விலகியவர்களாக இருப்பர்.

தேர்தல்களின் போது, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ பாதுகாப்பு அணிக்கு உதவுவது இந்த தொண்டர் படையின் பிரதான பொறுப்பாக இருக்கும்.

அவருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதில் கட்சி பிரமுகர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கட்சியின் அனைத்து அமைப்பாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுடன் பணியாற்றிய இராணுவ அதிகாரிகள் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் தாமாக முன்வந்து இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்சவின் மகனும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச எடுத்து வருவதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment