மக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கிராமசக்தி வேலைத்திட்ட முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நல்லாட்சி என கூறும் சுதந்திரகட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து ஆட்சியமைத்தபோது பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாம் கதைத்துதான் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக கூறினர். ஆனால் பலாலியில் இடம்பெற்ற நிகழ்வில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா மீண்டும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள் என வினவியபோது, இங்குள்ள அனைத்து பிரதிநிதிகளும் கதைத்துதான் காணிகள் விடுவிக்கப்பட்டது. அரசாங்கத்தில் நல்லது நடக்கும்போது தமக்கு பங்குண்டு எனவும், கெட்டது எனில் தமக்கும் அரசுக்கும் பங்கில்லை என்றது போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்ப செயற்படுகின்றது எனவும், இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பொய்யான விடயங்களை கூறி மக்களை ஏமாற்றும் செய்பாடுகளை விட்டுவிட்டு, மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஜனாதிபதி அடுத்த மாதமளவில் வருகை தரவுள்ளார். ஆளுநரும் முமையாக காணிகளை விடுவிப்பதற்கான வேலைத்திட்டத்தினை செய்துகொண்டுள்ளார்.
பலாயில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மெற்கொண்டு வருகின்றனர். அது உண்மையில் சிறந்த விடயம். ஆனால் இன்று பலாலி விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை நிப்பாட்டி மயிலிட்டி ஊடாக கொண்டுவருவதற்கு முயல்கின்றனர். அங்கால் உள்ள காணிகளை விடுவிக்கப்படாமல் வைத்திருப்பதற்கே இவ்வாறு மாற்று வீதியை அமைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான திட்டங்களிற்கு குறிப்பாக காணியை விடுவிக்காது இருப்பதற்கு எம்மவர்களேதான துணைபோகின்றனர் எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார். இவ்வாறான அபிவிருத்தி எமக்கு தேவை. ஆனால் மக்களின் முன்னேற்றத்தை தடுத்து எமக்கு அபிவிருத்தி தேவை இல்லை. எங்களுடைய காணிகள் எங்களிற்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் தேவைகள், மக்களின் அபிலாசைகள் வேறு இருக்க அரசிடம் இலஞ்சமாகவும், பிச்சையாகவும் கம்பெரலிய உள்ளிட்ட விடயங்களை பெற்று அதை எம்மக்களிற்கு கொடுத்து மக்களை அடகு வைத்து தம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் என நாளாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் குற்றச்சாட்டினார். எனவே எமது மக்களிற்கு என்ன விடயத்தை நிறைவேற்றுவோம் என மக்களிற்கு கூறி இந்த நல்லாட்சியை உருவாக்கினார்களோ, அதை நிறைவேற்றிட்டு அடுத்த விடயங்களிற்கு செல்லலாம் எனவும் அவர் இதன்போது ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
இன்றைக்கு சீமெந்து தொழிற்சாலையானாலும் சரி, தையல் தொழிற்சாலையானாலும்சரி எதுவென்றாலும் வந்தால் பரவாயில்லை. 5 வருடமாக ஆட்சியமைத்த அரசு முடிவுக்கு வரப்போகின்றத. இன்றுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இவர்கள் அதைக்கொண்டு வருவோமா அல்லது இதை கொண்டு வருவோமா என தெரிவித்தே 5 வருடம் முடிந்துவிட்டது. இவர்கள் புதிய தொழிற்சாலைகளை திறக்கும் முன்னர் இயங்குகின்ற பல தொழிற்சாலைகளையும் மூடும் வகையில் செயற்படுகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த தொழிற்சாலைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை திறக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment