Tuesday, July 2, 2019

பூஜித - ஹேமசிறி நெஞ்சுவலியென வைத்தியாசாலையில் தஞ்சமடைந்திருந்தபோது சீஐடி யினரால் கைது.!

ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்ககளை உரியநேரத்தில் மேற்கொள்ளாததன் ஊடாக கடமையை உதாசீனம் செய்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளகியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தேசிய வைத்தியசாலையிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் தமக்கு நெஞ்சு வலிப்பதாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சட்ட மா அதிபர் டப்புல டி லிபேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இவ்விருவரும் கடமையை தட்டிக்கழித்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகவும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம் அவர்கள் புரிந்திருப்பது மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றச் செயலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்;கு 52 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment