Saturday, July 13, 2019

கல்முனை பிரதேச செயலகத்தீர்வுக்கு காரணம் ஜேவிபி யா த.தே.கூ வா? பீமன்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதானதோர் செய்தி வெளியாகியுள்ளது. அவசரத் தீர்வாக பிரதேச செயலகத்துக்கான நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளருக்கான நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றது.

இச்செய்திகளை தொடர்ந்து இவ்வெற்றியின் முழுப்புகழும் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ராஜன் என்பவரையே சாரும் என பிரதேச இளைஞர்கள் ராஜனை தோழில் சுமந்தவாறு பட்டாசு கொழுத்தி மகிழ்துள்ளனர். மறுபுறத்தில் யாழ் மேலாதிக்க ஊடகங்கள் தீர்வுக்கான சகல புகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளார் பா.உ சுமந்திரனையே சாரும் என்று புகழ்கின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆசனம் எதிர்பார்த்து நிற்கும் ஊடகவியாபாரிகள் தற்போது சுமந்திரன் புகழ்பாட ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் அதன் பின்னணி. முன்னொருகாலத்தில் சப்ரா நிதிநிறுவனத்தினூடாக ஏழைகளின் கண்ணீரை பாணமாகக்குடித்த வித்தியாதரன் அந்த துரோகத்திலிருந்து தப்புவதற்காக பிரபாரன் புகழ்பாடினார் என்பது ஊர் அறிந்த விடயம். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல்வேறு வழிகளில் மிரட்டி தனக்கு ஆசனம் பெற்றுக்கொள்ள முனைந்தார். அது கைக்கூடாத நிலையில் ஆசனம் பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் புகழ்பாட ஆரம்பித்துள்ளார்.

செயலகத்திற்கென்ற தனியான கணக்காளர் கிடைத்துவிட்டார் என்பதற்காக பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு இன்னும் பதில்கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு தரப்புக்களுடன் கடந்தகாலங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது என்றும் அவற்றில் எத்தனை குப்பைத்தொட்டிக்கு சென்றுள்ளது என்பது தொடர்புமான வரலாற்றை புரட்டிப்பார்ப்போமானால் குறித்த பிரதேச செயலகம் அவ்வளவு இலகுவாக தரமுயர்த்தப்பட்டுவிடுமாக என்பதை ஊகித்துக்கொள்ளமுடியும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தலைதப்பியுள்ள யுஎன்பி அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பதும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் என்ன நிலையை எடுக்கப்போகின்றது என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள்.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழி பெற்றுக்கொண்டுவிட்டோம் என கொக்கரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செம்பு காவிகள் அவ்வாறான உறுதி மொழி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலையை உருவாக்கிய நம்பிக்கையில்லா பிரேரணையை பற்றி மறந்து விட்டனர். ஜேவிபி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதிமொழியை பெற்றிருக்கமுடியுமா என்பதும் கேள்வியே. எனவே உறுதிமொழிக்கு காரணம் ஜேவிபி யா அன்றில் த.தே.கூ வா?

No comments:

Post a Comment