கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று காலை 10.30 மணிமுதல் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரப்போராட்டத்தில் இவர்களுடன் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த நல்லாட்சி ஆரம்பித்த நாள் முதல் எங்களுக்கான இந்த விடயம் பாராமுகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே.
பிரதமரும்,ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள். எங்களுடைய இந்த தேவையை அறிந்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவையும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் அவர்களையும் அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். நாங்கள் இங்கு இனவாத,பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல், நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்காக போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டனர்.
(எஸ்.அஷ்ரப்கான்)
No comments:
Post a Comment