Wednesday, March 13, 2019

கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு வலுவிழந்துள்ளமைக்கு, ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் - ஜேவிபி

கையூட்டலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழு தற்போது வலுவிழந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜேவிபி, அது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில், இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜேவிபியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்கியமைக்கான காரணத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.

குறித்த ஆணைக்குழுவானது அரசியல்வாதிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக, போதியளவான கவனம் செலுத்துவதில்லை.

எனினும் இந்த நிலைமை தொடரக்கூடாது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாயமாக பொறுப்புக்கூற வேண்டும் என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment