Saturday, March 9, 2019

பயங்கரவாதத்தை முற்றாக எதிர்க்கும் பாகிஸ்தான் - இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுந்தது கேள்வி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தமது நாட்டில் இடம்கொடுக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் குறித்து, இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

அண்மைய நாட்களாக பாகிஸ்தான் பிரதமர் முன்னெடுத்து வரும் செயல்பாடுகளுக்கு சர்வதேச நாடுகள் பலத்த வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றன. இதுவரையிலும் இந்தியாவிற்கு சார்பாக குரல் கொடுத்த நாடுகள் கூட, பாகிஸ்தானின் நடவடிக்கையை வரவேற்று ஆதரவு வழங்கி வருகின்றன.

இதேவேளை தமது நாட்டுக்கு அதிக முதலீடுகளை தாம் எதிர்பார்ப்பதாகவும், பாகிஸ்தான் சிறந்த நாடாக மாற வேண்டும் என்பது தமது இலக்காகும் எனவும் கூறினார்.

நாட்டுக்கு நிலையான சமாதானத்தை பெற்றுக்கொடுக்க தாம் இறுதி வரை போராடுவதாகவும், தமது அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் உதவி அளிக்காது எனவும் குறிப்பிட்ட அவர்,
சமாதானத்தை விரும்பியே இந்திய விமானி அபிநந்தனை விடுவித்தோம். இது தாம் இந்தியாவுக்கு தெரிவித்த செய்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை புல்வாமா தாக்குதல் தொடர்பில் இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணைக்கும் தமது நாடு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment