Wednesday, March 20, 2019

சிவனொளிபாத மலையின் பெயர்ப்பலகை சிலரால் சேதம்

சிவனொளிபாத அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையினால் வைக்கப்பட்ட புதிய பெயர் பலகையின் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள்,இன்று இனந்தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டமை தொடர்பில், மஸ்கெலியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சிவனொளிபாத மலை என்று எழுதப்பட்டிருந்த குறித்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துக்கள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மஸ்கெலியா காவல்த்துறை அதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று, ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர் ஸ்ரீபாத என்று மாற்றப்பட்டது. எனினும் மஸ்கெலியா பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த பெயர்ப் பலகையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment