Tuesday, March 12, 2019

500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை

மொறட்டுவ ராவதாவத்த பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களான தம்பதிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மொறட்டுவை – ராவதாவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து 167 கிலோகிராம் நேற்று ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன்பெறுமதி சுமார் 1,800 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹெரோயின் கைப்பற்றப்பட்ட வீடானது, தம்பதிகளால் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே பன்னிப்பிட்டி வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி – அருவ்வல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல்போன சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான வைரம், கடந்த 5 ஆம் திகதி பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் கெலும் இந்திக எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த வைரத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறான போதிலும் கைப்பற்றப்பட்ட வைரத்தை மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள் அதிகார சபையிடம் பொலிஸார் நேற்று கையளித்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அந்த நடவடிக்கை இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment