Saturday, February 16, 2019

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு இல்லை - குப்பைகளை எங்கு போடுவது ? - ஜனாதிபதி

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மகாவலி C வலயத்தின் திம்புலாகல – நுவரகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கசிப்பையை அருந்துகின்றவர்கள் மனைவியைத் தாக்குகின்றனர். பொருட்களை நிலத்தில் வீசி அவற்றிற்கு சேதம் விளைவிக்கின்றார்கள், இந்த கசிப்பு போதை காரணமாக நோய்வாய்ப்படுகின்றனர். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என தெரிந்தாலும் தவறான விடயங்களை செய்து தமது வாழ்வை அழித்துக் கொள்கின்றார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்,

எனவே மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் வேண்டிய வேலைத் திட்டங்களை தயாரிக்குமாறு, அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது வாக்குறுதி வழங்கினார்.

இதேபோன்று நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்கள், குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று கூறிவருகின்ற நிலையில் குப்பைகளை எங்கு போடுவது? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். குறித்த குப்பைகளை கடலில் போட்டோமாக இருந்தால் சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வார்கள். கிராமப் புறங்களை பொறுத்த வரை குப்பைகளைப் போடுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

நம் அன்பான விவசாயிகளிடம் ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். நாம் உடம்புக்குள் உட்கொள்ளும் உணவு தவிர்ந்த ஏனைய அத்தனையும் குப்பைகளாகவே சேர்கின்றன. தற்பொழுது குப்பை முகாமை செய்வதற்குள்ள நவீன முறைமையை பொருத்தமான ஒர் இடத்தில் அமைப்பதன் மூலமே இந்தக் குப்பை பிரச்சினைக்கு தீர்வை வழங்கலாம். இவ்வாறு செய்வதனால் எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment