Wednesday, February 13, 2019

சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனை, நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனையை, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்தாமையினால், சி.வி. விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய, தம்மை மீண்டும் அமைச்சுப் பதவிக்கு நியமிக்காமல் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுள்ளமையினால், அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக பா. டெனிஸ்வரன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றத்தை நாடிய போதும், நீதிமன்றம் சி.வி.விக்னேஸ்வரனின் ஆட்சேபனையை நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment