Monday, January 7, 2019

ராஜபக்ச குடும்பத்தை சிறையில் அடைக்க, தீவிர முயற்சி.

மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை போர்க்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைபிடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே, பேராசிரியர், ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்த அரசாங்கம் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டதாகும்.
இந்த அரசாங்கத்துக்கு சில செயற்பாடுகள் இருக்கின்றன. இவை மக்கள் முற்றாக நிராகரித்தவையாகும். இதனை மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

ஸ்திரமாக முடிவுகளை எடுக்கும் அரசாங்கம் அன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் இருப்பதாக கூறிய ஜி.எல்.பீரிஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் , நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே அரசாங்கத்தை வழிநடத்திக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்.

அத்துடன் மக்களை ஏமாற்றி புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து, தமக்கேற்றவாறு ஆட்சியை அமைத்துக் கொள்ள இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். .

அத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தரப்பினர், மஹிந்த மற்றும் கோட்டாவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.

அதுமட்டுமன்றி, யஸ்மின் சூகாவும் இலங்கை இராணுவத்தின் 57 தலைவர்களை சர்வதேச நீதிமன்றின் ஊடாக சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த செயல்பாடுகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தினரை சிறை பிடிப்பதன் மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒருபோதும், இடமளிக்கப்பட மாட்டாது என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment