Friday, January 11, 2019

மனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.

தமிழ் முற்போக்கு  கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியதன் பின்னரும், அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்தும் தாம் நட்பு ரீதியில் பழகி வந்ததாகவும், தமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியமையாலேயே, மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவருடன் ஒப்பந்தம் பேசியதாக சஜீவானந்தன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, 65 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டமை தொடர்பிலான ஒலிநாடா ஒன்று அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இவ்வாறு பேரம் பேசப்பட்டதாக அந்த ஒலிநாடாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலிலேயே இந்த பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட போதே, ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.

No comments:

Post a Comment