உயர் நீதிமன்றத்தின் புதிய நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான நீதிபதி பீ.ரி. சூரசேன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எஸ். துரைராஜா மற்றும் ஈ.ஏ.ஜீ.ஆர். அமரசேகர ஆகியோர், உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியான கே.பீ. பெர்ணாந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவிய வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களுக்கு, அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியதை அடுத்து இந்த நியமங்கள் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment