Monday, January 7, 2019

கட்சி தாவலுக்கு கடுமையான சரத்து - ஜேவிபி

புதிதாக கொண்டுவரப்படவுள்ள 20 ஆம் திருத்தச் சட்டத்தில், அதி முக்கியமான சரத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக,ஜேவிபி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினர் லால் காந்த இதனை கூறினார்.

20 ஆவது திருத்தத்சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் சரத்து மட்டுமன்றி, கட்சித் தாவலுக்கு எதிரான கடுமையான சரத்தையும் தமது தரப்பு இணைத்துள்ளதாக, லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் லால் காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எந்தவொரு யோசனைக்கும், ஜே.வி.பி. ஒத்துழைக்க போவதில்லை என்று கூறிய அவர், புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதில் தமது தரப்பு கொள்கை ரீதியாக இணங்கும் என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தற்போது நாடாளுமன்றின் உள்ள குழப்ப நிலையின் காரணமாக இந்த திருத்தத்தை கொண்டு வர முடியுமா? என்பது எமக்குத் தெரியவில்லை. இதனாலேயே நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் சட்டத்திருத்தத்தை தனியாகக் கொண்டுவரத் தீர்மானிதுள்ளோம் என்று லால் காந்த கூறினார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாட நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இதுவரை இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று கூறிய லால் காந்த, மக்களின் நலனுக்கான நடவடிக்கைகளுக்கே, முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment