Saturday, December 1, 2018

போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த பிலிபீன்ஸில் 2 வருடங்களில் 5000 என்கவுண்டர். இதோ இலங்கையும் முயற்சிக்கலாம்.

பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிராக அந்நாட்டு ரோட்ரிகோ டியுடெர்ட் அதிபர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். இந்நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், 'பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அந்நாட்டில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டவுடன் என்கவுன்ட்டர் செய்ய உத்தரவிட்டதன் பேரில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மாயமாகி உள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இந்த எண்ணிகை அதிகரித்துள்ளது. 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது பிலிப்பைன்ஸ் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் கடத்தலை சுட்டிக்காட்டி பிலிப்பைன்ஸ் அரசு நடத்திய என்கவுன்ட்டர்களில் இந்த ஒரு வழக்கு மட்டுமே நீதிமன்றத்தால் அரசுக்கு எதிராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இவ்வாறானதோர் கடுமையான முறையை பரீட்சித்துப்பார்க்க முடியும் என்ற எண்ணம் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment