Friday, November 20, 2015

பாரிஸ் தாக்குதல் நடத்த உதவியவன் தலைக்கு 50 லட்சம் டாலர் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் தொடர் தாக்குதலின் மூலம் 129 பேரை கொன்றுகுவித்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவிசெய்த தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலி என்பவனின் தலைக்கு 5 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாரிஸில் தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் சிரியா சென்று பயிற்சி பெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவன் தாரத் முகமது அல்-ஜார்பா என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவனுக்கு தாரத் முகமது அல்-ஜார்பா என்று மற்றொரு பெயரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. பாரிஸில் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 6 பேர் ஈராக்கில் இருந்துவந்தவர்கள் என்றும் மற்றவர்கள் மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் உள்ள தீவுகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இவர்கள் சிரியாவில் உள்ள பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகளில் மூன்றுபேர், அகதிகளோடு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிரியாவிற்குள், துருக்கி எல்லை வழியாக ஜிகாதிகள் நுழைவதற்கும், சிரியாவில் பயிற்சி பெற்றுவிட்டு அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றான் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கிற்கு வெளியே ஐ.எஸ். தீவிரவாத செயல்பாட்டிற்கு இவன் பெரிதும் உறுதுணையாக இருப்பவன் என்று அமெரிக்கா கருதுகின்றது.

துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவிற்கு ஜிகாதிகளை இவன் அழைத்து சென்றுள்ளான். இந்நிலையில், தீவிரவாதி அபு முகமது அல்-ஷிமாலியின் இருப்பிடம் பற்றி தெரிவித்தாலோ, அவனை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தாலோ ஐம்பது லட்சம் டாலர்கள் (இலங்கை மதிப்புக்கு சுமார் 712 கோடி ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment