Monday, October 26, 2015

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையாகுமா கர்ணல் கருணாவின் நிலை.

புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கர்ணல் கருணா என்கின்ற முரளிதரன், சிறி லங்கா சுதந்திரக் கட்சியினால் சன்மானமாக வழங்கப்பட்ட உபதலைவர் பதவியைத் தமிழ் மக்களின் நலனுக்காக துறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது அறிவிப்பில் „ தமிழ் மக்களின் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளப்போவதாகவும், இனிமேல் சிங்களக் கட்சிகளுடன் இணைந்திருக்கப்போவதில்லை' என்றும் அறிவித்துள்ளார்.

கர்ணல் கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தான் வகிக்கும் பதவிகளுக்கு இராஜனாமா கடிதத்தைத்தையும் வழங்கியுள்ளார். இராஜனாமா தொடர்பில் அததெரணவிற்கு கருத்துரைத்த முன்னாள் கர்ணல் „சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எனக்கும் எந்த பிணக்கும் கிடையாது. என்னுடைய சொந்த அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் முன்னாள் கர்ணல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையவிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கர்ணலை இணைத்துக்கொள்வது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கருணாவை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக்கொள்வதாக ஆனந்தசங்கரி ஒப்புதல் வழங்கியுள்ளபோதும் கட்சியின் புலம்பெயர் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளுர் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கரியின் முடிவினை எதிர்த்து வருவததாக அறியக்கிடைக்கின்றது.

இந்நிலைமை முன்னாள் கர்ணலை அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு இட்டுச்செல்லுமா என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது சங்கரியின் தனிச்சொத்தாக மாறியுள்ள நிலையில் கர்ணல் கைவிடப்படமாட்டார் என்றே நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment