Friday, July 4, 2014

பொறியியல் பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி கொலைசெய்தவருக்கு மரணதண்டனை!

குற்றவாளியை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்யு மாறு நீதிமன்றம் உத்தரவு!

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவன் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கொலை செய்தார் என குற்றச்சாட்டப்பட்டு குற்றவாளியாக இனங்கண்ட நபருக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

செல்வவிநாயகர் வரபிரகாஷை என்ற மாணவனை 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தி கொலைசெய்த சிரேஷ்ட மாணவனான பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன் என்ற நபருக்கே நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளியான பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன், 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணைக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த நீதிபதி, நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள இந்த குற்றவாளியை இன்டர்போல் பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சிவபால சுந்தரம் கிருபாகரன், வரபிரகாஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தில் இருந்தபோதும் இக்கொலையுடன் அவருக்கு நேரடியான தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிரகாரம் இரண்டாவது பிரதிவாதிக்கு 1500 ரூபா தண்டம் விதித்த நீதிபதி, மரணமடைந்த செல்வவிநாயகர் வரபிரகாஷின் தந்தைக்கு ஒரு இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும் பணித்தார்.

No comments:

Post a Comment