Monday, June 23, 2014

ஐ.நா குழு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகள் ஆரம்பம்! ஸ்கைப் விசாரணையாம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த குழுவினர் ஓஸ்லோ, டோரோன்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் விசாரணைகளை நடத்த வுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்தார். குறித்த நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களிடம் ஐ.நா விசாரணைக் குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினர், விசாரணைகளை நடாத்துவதற்கான நடைமுறைகளை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், குறித்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்து விசாரணை நடாத்த முடியாது என இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாட்டிற்கு வருகைத் தந்து விசாரணை நடாத்த முடியாது என அவர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகைத் தந்து விசாரணைகளை நடாத்த முடியாத நிலையில், அவர்கள் ஸ்கைப் ஊடாக பெரும்பாலும் விசாரணைகளை நடாத்துவார்கள் என கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment