Monday, December 9, 2013

தடைசெய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் யாழில் தாராள விற்பனை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் சாதாரண மருந்தகங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் தாயரிக்கப்படும் குறித்த மாத்திரை 5 மாதங்கள் வளர்ந்த சிசுவை கூட அழிக்க முடியும் இதனால் தாய்க்கு உயிர்ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இலங்கையில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளபோதும் அந்த மருந்துகள் யாழில் சில மருந்தகங்களில் மூவாயிரம் ரூபாய் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் யாழில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இயங்குகின்றன அங்கு சென்றால் 20 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்பதனால் குறைந்த விலையில் இந்த மாத்திரைகள் விற்கப்படுவதால் பலரும் இந்த மாத்திரைகளை பாவிக்கின்றனர்.

இவ்வாறு பாவிப்பதால் பாதிக்கப்பட்டவர்களில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 முதல் 10 வரையானவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த கருத்தடை மாத்திரையை பாவிக்கும் முறையினை மருந்தாக விற்பனையாளர்களே விளங்கப்படுத்தி விற்பனை செய்கின்றனர் எனக்குறிப்பிட்டார்.

இதே வேளை யாழில் 6௦ வீதமான மருந்தகங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் யாழ். நகரில் உள்ள 34 மருந்தகங்களில் 16 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் வெளியிடப்படும் புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment