Friday, November 29, 2013

நீதிமன்றம் உத்தரவிட முடியாது! இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இந்தியாவிற்கான இலங்கை தூதர், பிரசாத் காரியவசம், இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட தடை கோரிய மனுவை, மதுரை மேல் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.மதுரை நீதிமன்ற கிளையில், திருநெல்வேலியை சேர்ந்த, லேனாகுமார் தாக்கல் செய்த மனு:

முதல்வர்களுக்கு மெயில்: நம்நாட்டிற்கான இலங்கை தூதர், பிரசாத் கரியவசம், மார்ச், 19ல், அனைத்து மாநில முதல்வர்களுக்கும், இ-மெயில் ஒன்றை அனுப்பினார்.

அதில், இலங்கையில் உள்ள, 12 சதவீத தமிழர்கள் மீது மட்டும், இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. அங்குள்ள, 75 சதவீத சிங்களர்கள், ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எனவே, தமிழர்கள் மீது மட்டுமின்றி, சிங்களவர்களையும் ஆதரிக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார்.

இது இந்தியர்களை, வட மாநிலத்தவர், தென் மாநிலத்தவர் என, பிரிக்கும் முயற்சி. ஐ.நா.,வின் வியன்னா மாநாட்டு தீர்மானப்படி, ஒரு நாட்டு தூதர், மற்றொரு நாட்டில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, கருத்துக்களை வெளியிடக்கூடாது, அந்நாட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்: இதை, பிரசாத் காரியவசம் மீறியுள்ளார். அவர், நம்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதிக்கும் வகையில், கருத்துக்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு தூதர்களுக்கான நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, ?வளியுறவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டுக் கொள்கை : மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.ஜெய்சந்திரன், எஸ்.வைத்தியநாதன் அடங்கிய, மேல் நீதிமன்ற அமர்வு உத்தரவு:

இது வெளிநாட்டுக் கொள்கை தொடர்பானது. வெளிநாட்டு தூதருக்கு எதிராக, குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இம்மனு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment