Monday, September 2, 2013

வாகன இறக்குமதிக்கு புதிய நிபந்தனை!

வாகன இறக்குமதிக்கான நாணயக் கடிதங்களை பெறும் போது வங்கியில் வைப்பிலிடவேண்டிய தொகையை நூறு வீதம் வரை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இத் தீர்மானம் நேற்று (01.9.2013) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வாகனமொன்றை இறக்குமதி செய்யும்போது வங்கியொன்றின் அங்கீகாரத்துடன் நாணயக் கடிதமொன்றை பெற வேண்டியது அவசியமாகும்.

இதன்போது வைப்பிலிட வேண்டிய தொகை தொடர்பில் ஒவ்வொரு வங்கிகளின் நடைமுறைகளுக்கு அமைய இதுவரை காலமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது எனினும் வாகன இறக்குமதி தற்போது வெகுவாக அதிகரித்துள்மையினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் பேரவையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போதே இப்பரிந்துரை செய்யப்பட்டது ஆனால்- பஸ்- லொறி- அம்பியூலன்ஸ்- உழவு இயந்திரங்களை இறக்குமதி செய்யும்போது இந்த புதிய விதிமுறை கவனத்திற் கொள்ளப்படமாட்டாது என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு அமைவாக இந்திய ரூபா மற்றும் ஜப்பான் யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கான செலவு தற்போது குறைடைந்துள்ளது.

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இப் புதிய விதிமுறை ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment