Wednesday, September 11, 2013

மனவியையும் மகளையும் வெட்டிக்கொன்றுவிட்டு கணவன் தலைமறைவு! யாழ் தென்மராட்சியில் சம்பவம்!!

யாழ் தென்மராட்சி பகுதியில் மனைவியையும் மகளையும் வெட்டிக்கொன்ற சந்தேகநபரொருவர் தலைமறைவான சம் பவமொன்று இன்று அதிகாலை 12.15க்கு இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில், 38 வயதான ஜெயமேரி (மனைவி) மற்றும் 18 வயதான மேரி திவேதினி (மகள்) ஆகிய இருவருமே கொல்லப்பட்டவர்களாவர்.

குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என தெரியவந்ததாக இப்படு கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் கொல்லப்பட்ட மனைவியும் கொலைச் சந்தேகநபரான கணவரும் கடந்த பல வருடங்களாக பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும் 15 மற்றும் 10 வயதுகளில் இரு மகன்மாரும் உள்ளனர். மனைவி, பிள்ளைகளை விட்டுப் பிரிந்த சந்தேகநபர், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் திருகோணமலையில் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தென்மராட்சியிலுள்ள தனது முதல் மனைவியின் வீட்டுக்கு வந்துள்ள இவர், மனைவி பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்தே, தனது முதல் மனைவியையும் மகளையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த மகன்மார்கள் இருவரும் கூச்சலி டுவதைக் கேட்டுள்ள அயலவர்கள், கொலை இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்க்குமிடத்து தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளதை அவதானித்து இது தொடர்பில் பொலிஸில் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மரண விசாரணைகளை அடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இப்படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கொடிகாமம் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com