எகிப்திய ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளின் இரக்கமற்ற தன்மைக்கு நிரூபணமாக இராணுவ ஆட்சிக் குழுவால் இரத்தம் தோய்ந்த படுகொலை மற்றும் அவசரகால ஆட்சி ஆகியவை எகிப்தில் நடைமுறைபடுத்தப்பட்டது என்பதுடன், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதனுடைய ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் எகிப்திய புரட்சியை குருதியில் மூழ்கடிப்பது என்ற இரக்கமற்ற தன்மைக்கும் இது நிரூபணமாக உள்ளது.
ஜூலை 3ல் இராணுவம், இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சியை ஆட்சியை விட்டு அகற்றியது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு எதிராக நடந்த பரந்த தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களுக்கு மத்தியில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக இருந்தது.
அந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு பின்னர் இராணுவ ஆதரவுடைய சர்வாதிகாரத்தை பகிரங்கமாக மீட்கும் முயற்சியாக மாறியது; அதுதான் எகிப்திய புரட்சிக்கு முன் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் நிலவியதாகும்.
புதன் அதிகாலை, பாதுகாப்புப் படைகள் ஹெலிகாப்டர்கள், ஆயுத கவச வாகனங்கள் மற்றும் ஸ்னைப்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்து எதிர்ப்பாளர்களையும், முர்சி ஆதரவாளர்கள் எகிப்து முழுவதும் நகரங்களில் நடத்தும் உள்ளிருப்பு போராட்டங்களையும் தாக்கின. தலைநகர் கெய்ரோவில், இராணுவம் இரு முர்சி ஆதரவு உள்ளிருப்புக்களை கலைத்து, பலமுறை மத்திய எதிர்ப்புத் தளமாக இருந்த ரபா அல்-அடவியா மசூதியையும் தாக்கியது.
“கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள் வானில் இருந்து மழைபோல் பொழிந்தன. உள்ளே ஆம்புலன்ஸ் வண்டிகள் எதுவும் இல்லை. நுழைவுகள் அனைத்தும் மூடப்பட்டன” என்றார் ஆர்ப்பாட்டக்காரரான 20 வயது மாணவனான கலீட் அஹ்மத்; ஒரு பருமனான தொப்பியை அணிந்திருந்த இவர் முகம் முழுவதும் கண்ணீரால் நனைந்தது. “அங்கு பெண்களும் குழந்தைகளும் உள்ளனர். ஆண்டவன்தான் அவர்களுக்கு உதவ வேண்டும். இது ஒரு முற்றுகை, குடிமக்கள் எதிர்ப்பு முகாமின் மீதான ஒரு இராணுவத் தாக்குதல்.”
இரத்தம் பெருகும் தலைக் காயத்தை பிடித்தபடி ஆசிரியர் சலே அப்துல் அஜிஸ் ராய்ட்டர்ஸிடம், “காலை 7 மணிக்கு அவர்கள் வந்தனர். ஆகாயத்தில் இருந்து ஹெலிகாப்டர்களும் கீழே புல்டோசர்களும் உதவின. எங்கள் சுவர்களை சிதைத்தனர். குழந்தைகள் மீது பொலிசும் படையினர்களும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்” என்றார். “அவர்கள் நாங்கள் நிறுத்தும்படி கெஞ்சியும்கூட எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார்கள்.” என்றார்.
235 பேர் கொல்லப்பட்டனர் என எகிப்திய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்; இதில் கெய்ரோவில் 100 பேர் இறந்தனர், 2,001 பேர் காயமுற்றனர். AFP தாங்கள் தனியே 124 பேர் கெய்ரோவில் இறந்ததை எண்ணியதாகக் கூறினர். எதிர்ப்பார்ப்பாட்ட தளங்களுக்கும் தள மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்தவர்களான முஸ்லிம் சகோதரத்துவ அதிகாரிகள் இறந்தவர் எண்ணிக்கை 2,200, காயமுற்றோர் 10,000 எனத் தகவல் கொடுத்துள்ளனர்.
இராணுவம் கொலைகளைப் பற்றிய தகவல்கள் வெளிவருவதை தடுக்க முயன்றனர்; எதிர்ப்பிடங்களை தவிர்க்கவும் என்ற ஆணைகளை மீறி வந்த செய்தியாளர்களை கொல்லும் அளவிற்கு சுட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் Sky News புகைப்படக்காரர் மிக் டீனும், ஐக்கிய அரபு எமிரேட்டுக்களின் Xpress service உடைய ஹபீபா அஹமத் அப்தெல் அஜிசும் அடங்குவர்.
ஆட்சி, முக்கிய நெடுஞ்சாலைகளையும் இரயில் போக்குவரத்துக்கள் கெய்ரோவிற்கு வருவதையும் நிறுத்தியது. இதையொட்டி முக்கிய எதிர்ப்புத் தளங்களுக்கு வரும் எதிர்ப்பாளர்கள் தடுக்கப்பட்டுவிட்டனர். கெய்ரோவிற்கு வெளியே, எகிப்திய சுகாதார அமைச்சரகம் கொடுத்த எண்ணிக்கை டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் மின்யா, பேயௌம் இடங்களில் காயமுற்றனர் எனக் காட்டுகிறது. இன்னும் பல டஜன் மக்கள் சூயஸ், சோஹக், அசூட் ஆகிய இடங்களில் நடந்த எதிர்ப்புக்களில் கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர்; அதே நிலைதான் அலெக்சாந்திரியா, பெனி சௌயிப் நோக்கி நடந்த எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்டது.
பல தசாப்தங்கள் முபாரக்கின் கீழ் இருந்த அவசரகால ஆட்சி மீண்டும் சுமத்தப்பட்டுள்ளது, பொலிசையும் இராணுவத்தையும் எதிர்ப்பாளர்களை தங்கள் விருப்பப்படி கைது செய்து காவலில் வைக்க அனுமதிக்கிறது. நேற்று பிற்பகல், எகிப்திய பொலிசார் தாங்கள் 543 பேரைக் கைது செய்ததாக அறிவித்தனர். மேலும் மாலை 7 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவும் எகிப்தின் 27 கவர்னர் ஆட்சிப் பகுதிகளில்12ல் இருக்கும்; இவற்றுள் நாட்டின் தொழில்துறை மையங்களும் அடங்கும்.
முர்சி நியமித்திருந்த ஆளுனர்களை இராணுவம் வெளியேற்றி, 25 ஆளுனர்கள் கொண்ட புதிய பட்டியலை வெளியிட்டது. இதில் 19 பேர் ஜெனரல்கள், முபாரக் விசுவாசிகள் என அறியப்பட்ட இரண்டு நீதிபதிகள். கெய்ரோவின் புதிய கவர்னர் கலால் மொஸ்தபா சயீத், இப்பொழுது கலைக்கப்பட்டுவிட்ட முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட அதிகாரியாவர்.
இந்த நிகழ்வுகள் ஒரு உறுதியான அரசியல் தர்க்கத்திற்கு கீழ்ப்பட்டுத்தான் உள்ளன: அதாவது முதலாளித்துவ வர்க்கம், புரட்சியின் முதலாவது எழுச்சியின்போது சில சலுகைகளை கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது, இப்பொழுது மிருதுவான கையுறைகளைக் கழற்றிவிட்டு, முதல் வாய்ப்பு வந்தவுடனேயே தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான அடியை கொடுக்கிறது.
இதில் எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு, வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் பலமுறையும் எகிப்திய இராணுவத்தின் குருதி தோய்ந்த அடக்குமுறையை ஜூலை 3ல் அது முர்சியை அகற்றியதிலிருந்து நடத்தியவற்றிற்கு ஆதரவை கொடுத்துள்ளது; இதை இராணுவ ஆட்சி சதி என்றும் அழைக்க மறுத்துள்ளது. ஏனெனில் அப்பொழுதுதான் எகிப்திய இராணுவம் 1.3 பில்லியன் டாலர்களை ஆண்டு ஒன்றிற்கு நிதியுதவியாக பெறமுடியும். இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, முர்சியை கவிழ்த்த ஜெனரல்களின் முடிவை “ஜனநாயகத்தை மீட்கும் பணி” எனப் பாராட்டினார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராஜதந்திரிகள் நேற்றைய படுகொலையை எதிர்கொண்டவிதம் இழிந்த முறை, பாசாங்குத்தனத்தின் சிறப்புக்களாக இருந்தன. கெர்ரி, தான் எகிப்தின் அவசரகால நிலையை “வலுவாக எதிர்ப்பதாக” கூறினார்; வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோசப் எர்னெஸ்ட் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு ஆதரவு தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்க வெளிவிவகார அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி வெற்றுத்தனமாக அறிவித்தார்: “சாலையில் சில குறிப்பிடத்தக்க மேடுபள்ளங்கள் உள்ளன என்பது உறுதி, ஆனால் நம் குவிப்பு ஜனநாயகத்திற்கு மீண்டும் திரும்புதல் என்பதில்தான் உள்ளது.”
பாசாங்குத்தனம், வெற்றுத்தனம் நிறைந்த கருத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் கத்தரின் ஆஷ்டோன் கூறினார்: “மோதலும் வன்முறையும் முக்கிய அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முன்னேற்றப் பாதை ஆகாது.” கெய்ரோவில் தோட்டாக்கள் பறக்கையில், பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், பாதுகாப்புப் படைகளை “நிதானமாகச் செயல்படுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படை படிப்பினைகள் கெய்ரோவில் சமீபத்திய படுகொலைகளில் இரத்தம் தோய்ந்த வகையில் சரியென நிரூபணமாகியுள்ளது. ஜனநாயகத்திற்கான போராட்டம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் அவர்களின் அரசியல் கூட்டாளிகளான மத்தியதர வர்க்கத்திற்கு எதிரான இரக்கமற்ற போராட்டத்தின் மூலம்தான் நடத்தப்பட முடியும். ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் பணி, சோசலிசம் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான சுயாதீனமான புரட்சிகரப் போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தின் மீதுதான் விழுகிறது.
2011ல் முபாரக் அகற்றப்பட்டபின், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் என தொழிலாளர்களும் இளைஞர்களும் செய்துள்ள நிலையில், தாராளவாத முதலாளித்துவம் மற்றும் மத்தியதர வர்க்கத்தில் அதற்கு நெருக்கமான வசதி படைத்த பிரிவுகள் வெளிப்படையாக எதிர்ப் புரட்சி முகாமிற்கு மாறியுள்ளன. தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச தலைமை இல்லாத நிலையில், முர்சிக்கு எதிராக பெருகும் வேலைநிறுத்த இயக்கம் மற்றும் வெகுஜன எதிர்ப்பு ஆகியவற்றை அவர்கள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
எகிப்திய பில்லியனர்கள் மற்றும் பல மில்லியனை உடையவர்களின் குழுவானது நிதியை அளித்து திரைக்குப் பின்னிருந்து அனைத்தையும் இயக்குகையில், திட்டமிட்ட ஆட்சி சதிக்கு தேவையான அரசியல் நிலைமைகள், தாராளவாத, நாசர்வாதிகள், போலி இடது கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் கூட்டணியால் தோற்றுவிக்கப்பட்டது; அவை இராணுவத்திற்குத் தேவையான “ஜனநாயக” மறைப்பை அளித்தன.
இப்பொழுது எகிப்து கொலைகார சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கையில் இந்த அமைப்புக்கள் ஒன்றில் அடக்குமுறையை ஆதரிக்கின்றன அல்லது தங்கள் சுவடுகளை மறைக்க முயல்கின்றன.
Egyptian Popular Current கட்சியின் நாசர்வாத தலைவரான ஹமதீன் சப்பய், இழிந்த முறையில் இரத்தம் கொட்டுவதற்கு காரணம் முஸ்லிம் சகோதரத்துவம்தான் என்றார். முஸ்லிம் சகோதரத்துவம் “அரசுடன் மோதல் நிலையைத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று ஓர் அறிக்கையில் அவருடைய கட்சி எழுதியது. “சகோதரத்துவத்தின் முயற்சியான கெய்ரோ மற்றும் பிற கவர்னர் ஆளும் பகுதிகளிலுள்ள வன்முறை வட்டத்தை விரிவாக்குவது நிராகரிக்கப்படுகிறது என்றும் தேவாலயங்கள்,பொலிஸ் நிலையங்கள் அவர்கள் இலக்கு கொள்ளுவதும் நிராகரிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. அறிக்கை மேலும் எகிப்திய மக்கள் பொலிசுக்கும், இராணுவத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் “பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றவும்” என்று அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றைய வன்முறைக்கு முன், கணக்கிலடங்கா தாராளவாத மற்றும் போலி இடது கட்சிகளானது, முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவு சக்திகளுக்கு எதிரான வன்முறை தேவை என்றன. எகிப்திய சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரான கரிமா அல் ஹெப்நவி: “இது ஒரு வன்முறையான உள்ளிருப்புப் போராட்டம், இதைச் சிதைக்கும் உரிமை ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் உண்டு, அரசாங்கம் செய்யாவிட்டால் நாங்கள் செய்வோம் என மக்கள் கூறுகின்றனர்.” என்றார்.
தாராளவாத விழிப்புணர்வுக் கட்சியின் நிறுவனரும், இப்பொழுது கலைக்கப்பட்டுவிட்ட புரட்சிக்கான இளைஞர் கூட்டணியின் முன்னாள் தலைவருமான ஷாடி கஜலி ஹர்ப், “இந்த உள்ளிருப்புக்கள் எப்படியும் அகற்றப்பட வேண்டும்.... துரதிருஷ்டவசமாக, காயங்கள், ஏன் இறப்புக்கள்கூட இருக்கும்” என்றார்.
இந்த தாராளவாத மற்றும் “இடது” சக்திகள் தங்கள் கைகளில் இரத்தக் கறையைக் கொண்டுள்ளன. இவைதான் அமைதியான எதிர்ப்பாளர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட, வெகுஜனப் படுகொலைக்கு அரசியலளவில் பொறுப்பானவர்கள்.
தாராளவாத அரசியல்வாதிகளின் மற்றொரு பிரிவினர், இராணுவம் அடிப்படை அரசியல் அதிகாரம் பெற ஆதரவளித்தவர்கள், இப்பொழுது படுகொலைக்கு தங்கள் பொறுப்பை மூடி மறைக்க முற்படுகின்றனர். தாராளவாதத் தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கு எகிப்தின் துணைத் தலைவருமான முகம்மது எல்பரடேய், அரசியல் இழிவுச் செயலின் உச்சக் கட்டமாக ஆட்சிக் குழுவின் கைப்பாவை அரசாங்கத்தில் இருந்து தன் பதவியை இராஜிநாமா செய்துவிட்டார்.
ஜனாதிபதி அட்லி மன்சூருக்கு எழுதிய கடிதத்தில் எல்பரடேய் குறிப்பிடுவது: “நான் ஒப்புக்கொள்ளாத முடிவுகளுக்குப் பொறுப்பைக் கொள்வது என்னால் இயலாததாகிவிட்டது. இவற்றின் விளைவுகளைக் குறித்து நான் எச்சரித்தேன். இறைவனுக்கு முன் ஒரு துளி இரத்தம் சிந்தப்பட்டதற்கும் நான் பொறுப்பு இல்லை.” எல்பரடேயின் கடிதம் அமெரிக்க வெளிவிவகார செயலகத்தின் நெருங்கிய ஆலோசனையுடன் எழுதப்பட்டது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியுமா? அவர் இராணுவத் தொடர்பினால் முற்றும் சமரசத்திற்கு உட்பட்டுவிட்டால், இந்த நம்பிக்கைக்கு உகந்த அரசியல் சொத்து அமெரிக்காவிற்கு பயனில்லாமல் போய்விடும் என அலுவலகம் அஞ்சுகிறது.
மத்தியதர வர்க்க ஏமாற்றுவாதிகளான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) இராணுவ ஆதரவுடைய கட்சிகளுடன் ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் நெருக்கமாக ஒத்துழைத்தவர்கள் தங்கள் பங்கை மூடி மறைக்க, இச்சக்திகளை விமர்சிப்பவர்கள் போல் காட்ட முற்படுகின்றனர். அவர்கள் எழுதுவதாவது: “தங்களை தாராளவாதிகள், இடதுகள் என்று அழைத்துக் கொள்பவர்கள், அல்-சிசி அரசாங்கத்தில் பங்கு பெற்றவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில், எகிப்திய புரட்சியைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். அவர்கள் தியாகிகளின் இரத்தத்தை விற்று இராணுவம் எதிர்ப் புரட்சிக்கு வெள்ளை அடித்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்தக் கரங்களில் இரத்தத்தைக் கொண்டவர்கள்.
எத்தகைய இழிந்த மோசடி! தாராளவாத முதலாளித்துவம் புரட்சியை “காட்டிக் கொடுக்கவில்லை” அது முற்றிலும் கணிக்கக்கூடிய வகையில், தன் வர்க்க நலன்களை ஒட்டி, வெகுஜன எதிர்ப்பை நசுக்கியது, பொலிஸ் அரச உள்கட்டமைப்பை மீட்டது. இராணுவ சார்பு தமரோடுக்கு ஆதரவு கொடுத்து, சதித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு உடந்தையாக இருந்த சக்திகளுடன் தோளோடு தோள் இணைந்து செயல்பட்டு, அவர்களை புரட்சியாளர்கள் என அறிமுகப்படுத்திய வகையில் RS தான் இதில் மிக இழிந்த பங்கைக் கொண்டது.
முர்சிக்கும், முஸ்லிம் சகோரத்துவத்திற்கும் எதிரான வெகுஜனங்களின் அதிருப்தியை இராணுவத்திற்கு ஆதரவாக திருப்பும் தமரோட் (எழுச்சியாளர்கள்) இன் பிரச்சார நடவடிக்கைகளில் RS பங்குபற்றியது, இது முன்னாள் முபாரக் ஆட்சிக் கூறுபாடுகளின் நிதியையும் ஆதரவையும் கொண்ட ஒரு வலதுசாரி சதித் திட்டம். தமரோட் தலைவர்கள் மஹ்மத் பட்ர் மற்றும் மகம்மத் அப்டெல் அஜிஸ் ஆகியோர் RS ஆல் அதன் தலைமையகத்தில் பாராட்டப் பெற்றனர்; அவர் அரச தொலைக்காட்சியில் இராணுவ ஆட்சி முறையை அறிவித்தபோது பின்னர் அல் சிசியைச் சுற்றி நின்றனர். தமரோட், அதன் நட்பு அமைப்புக்கள் RS உட்பட தங்கள் கரங்களில் இரத்தக் கறையைக் கொண்டவர்கள்.
நேற்றைய இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் புரட்சியின் முடிவைக் குறிக்கவில்லை; ஆனால் பல அரசியல் சக்திகள் தங்கள் வர்க்க விசுவாசங்களை இன்னும் வெளிப்படையாக வெளிப்படுத்துகையில் இது நெருப்பின் கீழ் மேலும் புத்துயிர் பெறுகிறது. தொழிலாள வர்க்கம், முபாரக் சர்வாதிகாரத்தின் இராணுவப் பிரபுக்களை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக முர்சிக்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் பங்கேற்கவில்லை. இராணுவம், முஸ்லிம் சகோரத்துவத்திற்கு எதிரான தன்னுடைய அடக்குமுறையை, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பொதுத் தாக்குதலோடு விரிவாக்க முற்படுகிறது, அது கட்டுப்படுத்தமுடியாத எதிர்ப்பை எதிர்கொள்ளும்.
No comments:
Post a Comment