Monday, August 5, 2013

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பாதுகாவலர்கள் 9 பேருக்கு நான்கரை வருட கடுழியச் சிறைத்தண்டனை!

கடும் அங்கவீனனுக்கு நான்கரை வருடம் சி்றை! ரூகாந்த வழக்கில் தீர்ப்பு! (காணொளி இணைப்பு)

2000 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ரூகாந்த குணதிலக மற்றும் சந்திரலேக்கா பெரேரா தம்பதியினர் வசித்து வந்த மத்தேகொடவில் அமைந்துள்ள வீட்டுக்கு ஆயுததாரிகள் புகுந்து அவர்களுக்குத் தொல்லை கொடுத்து , தங்க ஆபரணங்களையும் ஜீப் வாகனமொன்றையும் கடத்திச் சென்றது உள்ளிட்ட 9 குற்றங்களின்பேரில் சட்ட மா அதிபர் பாணந்துறை மேல் நீதிமன்றில் இந்த வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். 

குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகக் கடமைபுரிந்த பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு நான்கரை வருட கடூழிய சிறைத் தண்டனை பாணந்துறை நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி கடும் அங்கவீன நிலையில் இருப்பதனால் அவருக்கு தளர்த்தப்பட்ட நான்கரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட ரூகாந்த மற்றும் சந்திரலேக்காவுக்கு ரூபா 2 இலட்சம் வீதம் 10 குற்றவாளிகளும் ரூபா 20 இலட்சம் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கிற்கு 13 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய பாணந்துறை மேல்நீதிமன்ற நீதிபதி குஸலா சரோஜினி வீரவர்தன குறிப்பிடுகையில், ‘ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மட்டுமே’ என்று குறிப்பிட்டார்.

அவ்வாறிருக்க, அவர்கள் தங்களது கடமையிலிருந்து விலகி, குற்றமிழைத்துள்ளதுடன் இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது குறிப்பிட்டார்.

இவ்வாறு நீதியான தீர்ப்பு வழங்கப்பட்டமை குறித்து, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் பாடகர் ரூகாந்த தனது நன்றியைத் தெரிவித்ததுடன், ‘...இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் இவ்வளவுதான் என்று குறிப்பிட முடியாதுள்ளது. ஒரு ஆணாக நின்று என்னால் சமாளிக்கமுடியுமாக இருந்தாலும், சந்திரலேக்காவுக்கு அவ்வாறு முடியாது. இந்நிகழ்வினால் நாங்கள் நிறையவே மன உளைச்சலுக்கு ஆளாகினோம். என்றாலும், எங்களுக்கு நீதியான தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்பியிருந்தோம் என்றாலும் தீர்ப்பு என்று வழங்கப்படும் என்று அறிந்திருக்கவில்லை எனவும் பாடகர் ரூகாந்த குறிப்பிட்டார்.

(கேஎப்)

No comments:

Post a Comment