Wednesday, August 21, 2013

பேசாமடந்தையாக எகிப்துக்கு உதவிகளை இடை நிறுத்துகிறது அமெரிக்கா !

எகிப்து நாட்டுக்கு அமெரிக்கா வழங்கிவருகின்ற உதவிகளை தற்போதைக்கு இடைநிறுத்தி வைப்பதற்கு அந்நாட்டின் காங்கிரஸ் சபை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் முர்ஸியை பதவியிலிருந்து பலாத்காரமாக விலக்க முற்படுவதை இராணுவச் சூழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளபோதும், வாசிங்டன் அது அவ்வாறுதான் என்பதை ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இராணுவச் சூழ்ச்சி நடைபெறுகின்றது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டால் எகிப்துவுக்கு வருடாந்தம் பெற்றுக் கொடுக்கும் 585 மில்லியன் டொலர் உதவி உடனடியாக அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப நிறுத்த வேண்டிவரும். எது எவ்வாறாயினும் எதிர்வரும் வரவு செலவு நாளான செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒருமுடிவுக்கு வருவதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

செனட் சபையின் உறுப்பினர் பெட்ரிக் லீஹய் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சென்ற மாதம் ஆய்வில் இராணுவச் சூழ்ச்சி அங்கு இடம்பெறுகின்றமை தெரியவந்ததையடுத்தே இந்த நன்கொடை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் எகிப்தினால் பணம் செலுத்தப்பட்டுள்ள எபொச் வகை உலங்குவானூர்தித் தொகையொன்றும், பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கப்படுகின்ற உதவித் தொகையும் நிறுத்வைக்கப்பட்டுள்ளது.

நூற்றுக் கணக்கான உயிர்களைப் பறித்த இராணுவத்தினரின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிடுகையில், எகிப்துடனான நட்புறவை தொடர்ந்து பேண வேண்டியுள்ள போதும் அப்பாவிப் பொதுமக்கள் கொன்றொழிக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் சம்பிரதாயபூர்வ உதவிகளை மாற்றமுறாமல் வழங்குவது இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment