Monday, August 26, 2013

அப்பாடா....! என் பணிகள் குறித்து நவநீதன்பிள்ளை மகிழ்வுற்றார்! - வாசு

தனது அமைச்சினூடாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நவநீதன்பிள்ளை மகிழ்ச்சியடைந்ததாகப் குறிப்பிடுகிறார் தேசிய மொழிகள் மற்றும் சமூக சேவை ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

இன்று பிற்பகல் நவநீதன்பிள்ளையுடனான சந்திப்புக் குறித்துப் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் விசேட உறுப்பினர் அவை, அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளில் மீளவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமா? போன்றன தொடர்பில் ஆணையாளர் நவநீதன்பிள்ளை தன்னிடம் வினவியதாகவும் தற்போதைக்கு அவ்வாறானதொரு கருத்து இல்லை எனவும், தான் அதுதொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ந்து வருவதாக அவரிடம் குறிப்பிட்டதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இருந்து சில தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்டு, சிங்களம் உட்புகுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் தம்மிடம் வினவியதாகவும், அதற்கு அவர், இலங்கை இருவேறு பிரதேசங்களாகப் பிரிந்து காணப்படுவதால் தற்போது மொழியின் தேவைப்பாடு எல்லா இடங்களுக்கும் தேவையில்லை எனவும், எனவே அதனால் தான் அதுபற்றிச் சிந்திக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், சட்டத்திற்கு ஏற்ப மும்மொழிகளுடனும் கூடிய பெயர்ப்பலகைள் அமுலுக்கு வரும் என்றும் அதற்கு நெடுங்காலம் செல்லலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)


No comments:

Post a Comment