Tuesday, August 20, 2013

இலங்கையின் உண்மை நிலையை நான் கண்டுகொண்டேன் - நெதலி

இலங்கையின் உண்மை நிலையை கண்டுகொண்டேன் எனவும், சமாதானம் அபிவிருத்திக்கான இலங்கையின் பிரவேசம் குறித்து அறிவுறுத்த நாம் தயார் என பிரான்சின் செனட் சபை உறுப்பினர் நெதலி கூலே ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தாந்துள்ள பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர் நெதலி கூலே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சில நாடுகள் மற்றும் குழுக்கள் ஏனைய நாடுகளின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதாக தெரிவித்த கூலே, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் பரவலான கருத்துக்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக கூட்டமைப்பில் தமது நாட்டு பிரதிநிதிகளை கலந்து கொள்ள செய்வதற்கான பின்னணியை உருவாக்க அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்பாக விமர்சிப்பவர்களுக்கு நாம் கூறும் பதில் இங்கு வருகை தந்து நிலைமையை நேரில் கண்டறியுமாறு கூறுவேன். மோதல்கள் இடம்பெற்ற போது தினமும் வடக்கிலிருந்து தெற்கிற்கு சடலங்கள் எடுத்து வந்ததாகவும், நாடு முழுவதிலும் நிலவிய அச்சம் நீங்கியுள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மோதல்கள் முடிவடைந்ததன் பின்னர் அபிவிருத்திக்கான கூடுதலான நிதி தெற்கிற்கன்றி வடக்கிற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கின் அபிவிருத்திகளை தான் நேரில் அவதானித்ததாக கூறிய நெதலி கூலே, அங்கு இராணுவத்தினர் ஆற்றும் பணியையும் பாராட்டி பேசினார்.

No comments:

Post a Comment