நான்கு நாட்கள் தேசிய அளவிலான வெகுஜன எதிர்ப்புக்களை தொடர்ந்து எகிப்திய ஜனாதிபதி முகம்மது முர்சி அகற்றப்பட்டபின், அதிகாரம் ஒரு இராணுவ ஆட்சிக் குழுவின் கைகளில் உள்ளது, அது நாட்டின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-அரசியல் நோக்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிகொண்டது.
வெறுக்கப்பட்ட முர்சியின் ஆட்சி அகற்றப்பட்டமையானது பெரும் ஆரவாரத்தை தூண்டியுள்ளது. ஆனால் இந்த உணர்வு எவ்வளவு நேர்மையானதும், ஆழமானதுமாக இருந்தாலும், முர்சி அகற்றப்பட்டு அதிகாரத்தில் இருத்தியுள்ளது இராணுவத்தைத்தானேயன்றி வெகுஜனங்களை அல்ல என்பதுதான் உண்மை. வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டிய அடிப்படைக் கோரிக்கைகள் எதுவும்—கௌரவமான வேலைகள், வாழுவதற்கான ஊதியங்கள், போதுமான சமூகநலச் சேவைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள்—இராணுவ ஆட்சியால் நிறைவு செய்யப்படமாட்டா.
இராணுவம் ஒரு முக்கிய காரணத்திற்காக தலையீடு செய்துள்ளது: எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் பெருகும் அரசியல் இயக்கத்தை முன்கூட்டியே தவிர்ப்பதற்காகவும் நசுக்குவதற்காகவுமாகும். நேற்று இரவு அது அறிமுகப்படுத்தியுள்ள கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக விழைவுகளின் உண்மையான வெளிப்பாடு அல்ல. மாறாக, புதிய ஆளும் அமைப்பு பிற்போக்குச் சக்திகளின் தீய கூட்டணி ஆகும்; இதில் நீண்டகாலம் ஹொஸ்னி முபாரக்கின் எடுபிடியாக இருந்தவர்கள், பல தாராளவாதிகள், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியுடன் நெருக்கமான தொடர்புகளை உடையவர்கள் ஆகியோர் உள்ளனர். தனிப்பட்டவர்கள் எவரும் அல்லது அமைப்புக்கள் எதுவும் ஒரு வெகுஜன சமூகத் தளத்தை கொண்டிருக்கவில்லை, மக்களுக்கான சமூகநல வேலைத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை.
முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) தொலைக்காட்சி நிலையங்களை கைப்பற்றி, முர்சியையும் கைது செய்தபின், இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவர் ஜெனரல் அப்துல் படா கலில் அல்-சிசி ஒரு அரசியல் “சாலை வரைபடத்தை” கொடுத்துள்ளார்: இதில் அரசியலமைப்பு தற்காலிகமாக, உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, “தேசியத் தொழில்நுட்ப அறிஞர்” அரசாங்கம் எனப்படுவதை அமைப்பது ஆகியவை உள்ளன.
“தொழில்நுட்ப அறிஞர்” என்னும் சொற்றொடர் அரசியலில் நடுநிலை காட்டும் வல்லுனர்கள் என்னும் தோற்றத்தைத் தூண்டக் கூறப்படுகிறது; அவர்கள் வர்க்க நலன்களுக்கு மேலே இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. உண்மையில், “தொழில்நுட்ப அறிஞர்கள்” எனப்படுவோர் சர்வதேச வங்கிகளின் பிற்போக்குத்தன செயற்பாடுகளில் ஆழமாக ஈடுபட்டிருப்பவர்களாவர்.
அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மை, அல்-சிசி தன்னுடைய “சாலை வரைபடத்தை” நேற்று மாலை அறிவித்தபோது அவரை சுற்றி இருந்த பிற்போக்குவாதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியவரும். இவர்களுள் பல தளபதிகள், கோப்டிக் போப் இரண்டாம் தவட்ரோஸ், பெரும் இமாம் அல்-அஷர் அஹ்மத் அல்-தயிப் மற்றும் எதிர்ப்பு அரசியல்வாதிகளான தேசிய மீட்பு முன்னணி (NSF) தலைவரும் முன்னாள் ஐ.நா. அதிகாரியுமான முகம்மது எல்பரடேய், அதி வலது சலபிஷ்ட் அல் நூர் கட்சியின் யூனிஸ் மகியோன் மற்றும் எதிர்ப்பு தமரோட் (‘எழுச்சி’) கூட்டணியின் மகம்மது பட்ர் ஆகியோர் இருந்தனர்.
இந்த நபர்களில் ஒவ்வொருவரும், முக்கிய அரசியல் மற்றும் மத வேறுபாடுகளில் உள்ள எகிப்தின் புதிய ஆட்சிக்கு பரந்த ஆதரவு என்னும் தோற்றத்தை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இராணுவம், தலைமை அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள ஆட்லி மன்சூரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. முகம்மது எல்பர்டேய் பிரதம மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். சீக்கிரம் தேர்தல்கள் நடைபெறும் என்னும் தெளிவற்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மன்சூர், பழைய முபாரக் ஆட்சியுடன் நீண்டக்கால உறவுகளைக் கொண்டவர். பல காலம் ஐ.நா.வில் அதிகாரியாக பணியாற்றிய எல்பரடேய் அமெரிக்காவின் பொருளாதார, வெளியுறவுக் கொள்கை நடைமுறையுடன் நெருங்கிய தொடர்புடையவர். எல்பரடேய் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறார்—சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்திய பேச்சுக்களில்; அது அடிப்படை பொருள்களான தானியம், எரிபொருள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் மானியங்கள் வெட்டப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு அரங்கமைத்த அரசியல் தந்திரோபாயங்களில், முக்கிய பங்கு தமரோட் கூட்டணிக்கு உண்டு. இது முற்றுமுழுதாக ஒரு முதலாளித்துவ அரசியல் இயக்கம் ஆகும். ஏப்ரல் மாத இறுதியில் முர்சிக்கு எதிராகக் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சாரத்திற்காக நிறுவப்பட்ட இந்த அமைப்பு, விரைவில் முன்னாள் முபாரக் ஆட்சியில் எஞ்சியிருப்போர், முஸ்லிம் சகோதரத்துவத்தை எதிர்க்கும் பலவகை எதிர்க்கட்சியினர், தாராளவாத, இஸ்லாமியவாத, போலி இடது அனைத்தும் கூடுமிடமாகியது. இதன் ஆதரவாளர்களில் எல்பரடேயின் NSF, இஸ்லாமிய வலுவான எகிப்து கட்சியின் முன்னாள் MB யின் உறுப்பினர் அப்தெல் மோனிம் அபௌல் போடௌ, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகியோர் அடங்குவர். கடைசியாக முபாரக்கின் கீழ் பிரதமராக இருந்தவரான தளபதி அஹ்மத் ஷபிக் ஒப்புதலையும் இந்த இயக்கம் பெற்றது.
முர்சியை அமெரிக்கா ஆதரித்து வந்தபோதிலும்கூட, எகிப்திய ஆட்சி காப்பாற்றப்பட முடியாது என ஒபாமா நிர்வாகத்திற்கு தெளிவானவுடன், இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியது. எகிப்திய இராணுவமானது தளபதி மார்ட்டின் டெம்ப்சி என்னும் அமெரிக்க கூட்டுப் படை தலைவருடன் தீவிர விவாதங்கள் நடத்திய பின் ஆட்சிமாற்றத்தை செயல்படுத்தியது.
நேற்று மாலைவந்த அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா முர்சி அகற்றப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தார்; அதே நேரத்தில் “இராணுவ சதி” என்ற சொல்லையும் தவிர்த்தார். இராணுவத்தின் மீது தடை எதையும் சுமத்தாத தெளிவற்ற சொல்லாட்சியில், ஒபாமா புனிதமாக இராணுவம் “விரைந்து பொறுப்புடன் செயல்பட்டு முழு அதிகாரத்தையும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிவிலிய அரசாங்கத்திற்கு கொடுக்க முன்வரவேண்டும் என்றும், இது அனைத்தையும் உள்ளடக்கும் வெளிப்படையான வழிவகையில் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மீண்டும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) —எகிப்திலுள்ள மிக முக்கியமான போலி இடது குழுக்களில் ஒன்று— அதன் வனப்புரையை பயன்படுத்தி முதலாளித்துவத்தின் அரசியல் தந்திரங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டுள்ளது. பெப்ருவரி 2011ல் RS ஆனது இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்தது; முபாரக் அகற்றப்பட்டபின் அது பதவிக்கு வந்தது. 2012ல் இராணுவம் பெருகிய மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்தபோது, அவர்கள் முர்சியின் தேர்தலை புரட்சியின் வெற்றி எனப் பாராட்டினர். இப்பொழுது தொழிலாள வர்க்கம், முர்சி மற்றும் MB க்கு எதிரான போராட்டத்தை நடத்துகையில், இவர்கள் சதிக் குழுவுடன் இணைந்து, மீண்டும் இராணுவத்திற்கும் முபாரக்கின் பழைய ஆட்சிக் கூறுபாடுகளும் அதிகாரத்திற்கு வந்துள்ளதை ஆதரிக்கிறனர்.
RS உடைய பிற்போக்கு அரசியலில் ஒரே நீடித்த கூறுபாடு அவர்களுடைய தொடர்ந்த எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வெளிப்படக்கூடாது என்பதற்கு இருப்பதுதான். இவர்கள் உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகின்றனர்; அதுதான் எகிப்திய முதலாளித்துவ ஸ்தாபனத்தினதும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு நெருக்கமுடன் இணைந்த பிரிவுமாகும்.
உலக சோசலிச வலைத் தளம், இராணுவத்தின் மீது பிரமை கொள்ளவேண்டாம் என தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கிறது. நிதிய மூலதனம் கோரும் கொள்கைகளைத்தான் இராணுவம் செயல்படுத்த முற்படும். இறுதிப் பகுப்பாய்வில், ஒருபுறம் இராணுவம் மறுபுறம் அகற்றப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவம் என்பது ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகும். இராணுவம் தயாரிக்கும் அடக்குமுறையின் முக்கிய இலக்கு, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதுதான். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் மேலதிக நடவடிக்கைகள் “தேசிய நலன்களுக்கு” எதிரானவை, நெறியற்றவை எனக்கண்டிப்பதற்கு அரங்கு அமைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எகிப்தை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள புரட்சிகர நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவது என்பதற்கு வெளியில் ஒரு முற்போக்கான தீர்வு எதுவும் கிடையாது. அதற்கு நகர்ப்புற, கிராமப்புற வறிய பரந்த வெகுஜனங்களை ஒரு சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரட்டவேண்டும்.
No comments:
Post a Comment