Thursday, July 11, 2013

பிரித்தானியப் பிரஜைக்காக வக்காளத்து வாங்கியது பிரித்தானிய தூதுவராலயம்! எச்சரிக்கை விடுத்தார் கோட்டை நீதவான்!!

கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கொழும்பு கோட்டை நீதிபதி திலினி கமகே எச்சரித்துள்ளதுடன் உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவகையில் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தாத பிரித்தானிய பிரஜையின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு கோரி பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிபதி திலினி கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஏற்றவாறு வழக்கை விசாரிக்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடவுச் சீட்டைக் கேட்டு உரிய நபர் மனுத் தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, உயர் ஸ்தானிகராலயம் அல்ல என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரித்தானிய பிரஜையான ஹெலன் ஜோன் ரூபா 17 ஆயிரத்து 202 இற்கான கட்டணத்தைச் செலுத்தாது ஹோட்டலிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு கிரேன் ஓரியண்ட் ஹோட்டல் முகாமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹோட்டலிலிருந்து வெளியேறியவர் தனது கடவுச் சீட்டை தவறுதலாக ஹோட்டலிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

அவது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொலிஸார் அந்தக் கட்டணத்தை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் செலுத்திவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகமும் முன்வந்துள்ளதாக நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே உரியவர் இன்றி உயர் ஸ்தானிகராலயத்தால் கடவுச் சீட்டைக் கோரி நிற்பது சட்டத்திற்குப் புறம்பானது எனத் தெரிவித்துள்ள நீதிபதி அவ்வாறு கோரி நிற்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com