Wednesday, July 10, 2013

எனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழும் ஆசையில் எனது மனைவியை கொலைசெய்தேன் - கணவன்

சாத்தான்குளம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை சம்பவத்தில் மனைவியை காரில் கொண்டு போய் கொலை செய்த சுதாகர், வேறொரு பெண்ணுடன் தனக்கு காதல் இருந்ததால், அவருடன் சேர்ந்து வாழும் ஆசையில் மனைவியைக் கொலை செய்ததாக பொலீஸில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அடிக்கடி செல்போன் பேசியதையும், சிகரெட் பழக்கத்தை தட்டிக் கேட்டதாலும் மனைவியைக் கொலை செய்தேன் என்று கார் கொலைக் கணவன் நெற்று கூறியதையடுத்து இன்று உண்மை விவரம் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 33). இவர் கட்டிட காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகள் சூர்யா (30) என்பவருக்கும் 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சூர்யா கொலை செய்யப்பட்டார். இதையட்டி சுதாகர் கைது ஆனார்.

நானும், தூரத்து உறவுக்கார பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். அவர் சென்னையில் எம்.எஸ்சி., படித்து வருகிறார். எனவே அவரை திருமணம் செய்வதற்காக எனது குடும்பத்தினருடன் சென்று பெண் கேட்டோம். அப்போது நான் பிளஸ் படித்து இருப்பதாகவும், அந்த பெண் எம்.எஸ்சி., படித்து வருவதாகவும் கூறி அவருடைய பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டனர். இதனால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.

காதலியை மறக்க முடியாததால் எனக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்போதும் சிகரெட் பிடித்து கொண்டே இருந்தேன். எனக்கு 33 வயது ஆகி விட்டதால் என்னுடைய பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு இடங்களில் பெண் பார்த்து கொண்டிருந்தனர். நான் பலமுறை திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் தட்டிக்கழித்து வந்தேன்.

என்னுடைய மனைவி சூர்யா என்னை மதிக்காமல் எப்போதும் எதிர்த்து பேசுவார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, எங்கள் குடும்பத்தில் அனைவரையும் அப்படித்தான் பேசுவேன், உன்னையும் அப்படித்தான் பேசுவேன் என்று கூறினார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. எப்போதும் அவர்களிடம் செல்போனில் பேசிக்கொண்டே இருப்பேன். இதனால் நான் எப்போது செல்போனில் பேசினாலும் சூர்யா என்னிடம் தகராறு செய்வார். செல்போனில் உள்ள எண்களைப் பார்த்து, இந்த எண்கள் யாருடையது? என்று கேட்டு நச்சரிப்பார். எனவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விடுவேன்.

இந்த சம்பவங்களால் மனைவி மீது எனக்கு வெறுப்பு அதிகமானது. தினமும் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருவேன். அவளை கொலை செய்து விட்டால் காதலியை திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். எனவே இதற்காக திட்டமிட்டு நண்பரின் காரை வாங்கிக்கொண்டு, மனைவியை அழைத்துக்கொண்டு நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் இரவில் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து மின்வாரிய அலுவலகம் அருகே வந்ததும் காரை நிறுத்தினேன். பின்னர் சூர்யாவின் கழுத்தில் கத்தியால் குத்தினேன். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் கத்தியை சுமார் 10 மீட்டர் தொலை வில் வீசி எறிந்தேன்.

சூர்யா விபத்தில் இறந்ததாக அனைவரும் கருத வேண்டும் என்று நினைத்து காரை மின் கம்பத்தில் மோதினேன். சூர்யா கொலை செய்யப்பட்டார் என்பது தெரிந்ததும் பொலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு சுதாகர் பொலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com