Thursday, July 4, 2013

ரம்புக்வெலவின் மகனுக்கு மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாதா? பிரசன்ன ரணதுங்க

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெலவின் மகனான ரமித் ரம்புக்கெல 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்றமை தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தனது மகன் செய்தது ஒரு சின்ன விடயமாகும் என்று ரமித் ரம்புக்வெல்லவின் தந்தையும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இதேவேளை ரமித் ரம்புக்வெல என்ற வீரர் நாட்டை பற்றியோசித்து பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும் என்று தெரிவித்த மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரம்புக்வெலவின் மகனுக்கு மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் நானும், விமானத்தில் பயணம் செய்திருக்கின்றேன். மலசல கூட கதவிற்கும், விமானத்தின் கதவிற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறியதில்லை. தெரியாத விடயம் இருந்தால் விமான பணியாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதில் எவ்விதமான தவறும் கிடையாது. கதவுகள் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனதை நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பத்திரிக்கைகளின் ஊடாகவே நான் அறிந்து கொண்டேன். அவர், மதுபோதையில் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அது உண்மையாயின் அமைச்சரின் மகனாக அல்ல நாட்டை பிரதிநித்துவப்படுத்துகின்ற விளையாட்டு வீரர் என்றவகையில் பொறுப்புடன் நடந்திருக்கவேண்டும். இளைஞர் காலத்தில் நாமும் பல விடயங்களை செய்திருக்கின்றோம். அமைச்சரின் பிள்ளைகள் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று எங்களது தந்தையைவிடவும் ஆசிரியையான எங்களுடைய அம்மாவே அடிக்கொருத்தடவை அறிவுரை கூறிக்கொண்டு இருப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com