Saturday, July 27, 2013

காணாமற்போனவர்களை கண்டறிய விசேட ஆணைக்குழு

கடந்த 30 வருட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்கவிற்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இந்த ஆணைக் குழுவுக்கு வழங்கப்படவுள்ள பணி மற்றும் கட்டளைகள், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விபரம் தொடர்பான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படுமென ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமித்த கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது, யுத்தகாலத்து மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு பரிந்துரை செய்திருந்தது.

இலங்கை இராணுவம் வேண்டு மென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிய கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, தேவையேற்படின் வழக்குகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு ஆதாரங்களை வழங்குவதோடு காணாமல் போனமை தொடர்பாக ஆராய அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது.

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் 99 சதவீதமானோர் புனர்வாழ் வளிக்கப்பட்டு சமூகத்தில் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர் என்பதுடன் புலிகளினால் கொல்லப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 9000 பேருக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment