Wednesday, July 31, 2013

புலிக்கொடியுடன் ஓடிய யசோதார சடாச்சரமூர்த்தியின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்க

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறி முதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டார். 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அவருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வழக்கை ஓகஸ்ட் 13 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இங்கிலாந்து கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றபோது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment