நடைபெறவுள்ள மாகாணசபைக்கான வேட்பு மனுக்களை நாளை (29.07.2013) தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான வவுனியா மாவட்ட வேட்பாளர் தெரிவில் பதவிக்காக கட்சிக்குள் குத்து வெட்டு இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு இரு வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்ததநிலையில் அதற்காக வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் ஒரு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முற்றைய வேட்பாளரை தெரிவு செய்வதற்காக தேவராஜா, சேனாதிராஜா, முகுந்தரதன், கோபிநாத், சுதாகரன் ஆகியோரில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி தொடர்கிறது.
இந் நிலையில் வவுனியா நகரசபை உப தலைவர் முகுந்தரதனை நியமிக்க வேண்டாம் என வவுனியா மாவட்ட புத்திஜீவிகளும் சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கோரிய நிலையில், அதனை பொருட்படுத்தாத தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் முகுந்தரதனை வேட்பாளராக நியமிக்க முனைந்து வருவதனால், தாம் பழைய உறுப்பினராக இருந்தும் தமது சொல்லுக்கு மதிப்பளியாது நகரசபையில் இடமபெற்ற மோசடிகளுக்கும் குழப்பங்களுக்கும் உதவிய முகுந்தரதனை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என அதிருப்தியடைந்து பல சிரேஸ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்களும் ரதனின் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ரதன் நியமிக்கப்படும் பட்சத்தில் அவரும் வெளியேறலாம் என தெரிவிக்கப்படுவதுடன் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் நியமனத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளதுடன் சுயேட்சை குழு ஒன்றும் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தனக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தராது விடின் தான் இறக்கப் போவதாக வவுனியா நகரசபை உபதலைவர் முகுந்தரதன் தனது கட்சிக்கு தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment