Tuesday, July 2, 2013

தமிழ் மக்களுக்கு த.தே.கூ மிகப் பெரிய துரோகம் இழைக்கின்றது! கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை.....!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை பகிஷ்கரிக்க எடுத்த தீர்மானம் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய துரோகமாகுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் அதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தெரிவுக்குழுவுக்கு சமுகமளிக்காமை மூலம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார்கள் எனவும், நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு பாராளுமன்ற விதிமுறைகளுக்குட்பட்ட தொன்றே தவிர அரசாங்கத்தின் செயற்பாடல்ல என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள தவறியிருப்பதாகவும், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை மறுக்கும் இவர்கள் எதற்காக பாராளுமன்றத்திற்கு மட்டும் சமுகமளிக்க வேண்டுமெனவும், அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இது குறித்து பேச்சு நடத்தி அவர்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்காகத் தொடர்ந்தும் தூண்டுதல்களை விடுத்து கொண்டேயிருப்போமெனத் தெரிவித்த அமைச்சர், இறுதித் தறுவாயிலாயினும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு சமுகமளிப்பதே சிறப்பானதாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக் காவிடினும் அதன் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக் கப்படுமென்பதில் ஜயமில்லை. இருந் தாலும், கூட்டமைப்பினர் தமது கருத்துக்களை முன்வைக்க கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை வீணாக தவறவிடுகின்றனர் என்றே கூறவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதி முறைகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டினை பாராளுமன்ற அமர்வுகளின் போது நாட்டு மக்களுக்காக அறிவிக்க முடியுமாகவிருந்தால், தெரிவுக் குழுவில் கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டினை அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க முடியுமே எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் பாராளுமன்றத்தின் கணக்கு விவரம் குழுவுக்கு சமுகமளிக்கும் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்காமை தங்களுக்குள்ள பொறுப்புக்களிலிருந்து விலகி நடப்பதாகவும் தெரிவுக் குழுவில் அங்கம் வகித்ததன் பின்னர் கூட்டமைப்பினர் தமது நிலைப்பாட்டினை எவ்வகையிலாவது வெளிப்படுத்த முடியுமெனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நான் ஒரு ஜனநாயகவாதியெனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டில் பிரிவினை வாதம் தோன்றாமல் இருப்பதற்கு மாகாண சபைகள் முறைமை அவசிய மென்பதையும் மாகாண சபைகள் முறைமை முற்றாக இல்லாதொழிப்பதனை நான் ஏற்க மறுக்கிறேன் எனவும் கூறிய அமைச்சர் அதிக மக்களை பிரதிநிதித் துவப்படுத்தும் முக்கிய கட்சிகள் மாகாணசபை முறைமைக்கு பாரிய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து எவ்வித அழுத்தங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சம்பந்தப்பட்டவர்களுடன் உள்நாட்டில் பேச்சு நடத்துவதனை விடுத்து இந்தியாவின் மத்திய அரசாங்கத் திடம் பேச்சு நடத்தி திரும்பியுள்ளனர் இதன்போது உள்நாட்டு விவகாரங்களை ஏதேனுமொரு வழியில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றே இந்தியா கூட்டமைப்பினருக்கு பதிலளித்துள்ளதே தவிர இலங்கை அரசாங்கத்துக்கு எந்தவொரு அழுத்தத்தையும் முன்வைக்க வில்லையெனவும் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  July 2, 2013 at 9:13 PM  

Mr Vasudeva Nanayakara should know that TNA is playing the cards in order to cheat the tamil nation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com