Saturday, July 6, 2013

தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும் ஆனால் அப்பதவி நிரந்தரமாக இருந்திருக்காது!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்தின் பாது காப்புக்காகவே அரசுடன் இணைந்து அரசியல் செய்கின்றது எனவும், அரசுடன் இணைந்து அரசியல் செய்வது எதிர்க் கட்சியில் இணைந்து அரசியல் செய்வதைவிடவும் சிரம மான காரியமாகும், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரி வித்தார்.

கண்டி மடவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், இன்று பேரினவாதிகள் சிலரால் முஸ்லிம்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன எனவும், அதனை தந்திரோபாயமாகத்தான் அனுகவேண்டியுள்ளது எனவும், இதற்காக நான் அரசை விட்டு வெளியேவர முடியாது. அப்படி வெளியேறினால் அது பேரினவாதத்திற்கு உடந்தையாகிவிடும் எனவும், நான் கட்சியின் தலைவன் என்ற வகையில் கட்சியைப் பாதுகாப்பதுடன் உணர்வுபூர்வமாக சமூகம் தொடர்பான பிரச்சினைகளை அனுகவேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழர் கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சு பதவியை பெற்றிருக்க முடியும். ஆனால் நான் அப்படிச் செய்திருந்தால் அப்பதவியின் ஆயுள் மிகக் குறுகி இருக்கும் எனவும், அத்துடன் கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பது பாரிய சவாலாக மாறி இருக்கும் எனவும், பேரினவாத செயற்பாடுகள் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல. அவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகும் என அவர் தெரிவித்தார்.

எனவே முஸ்லிம் சமூகத்திற்காகத்தான் நான் அரசுடன் இணைய வேண்டிவந்தது. அதேநேரம் கட்சியையும் பாதுகாக்கவேண்டி இருந்தது எனவும், வேண்டாத சம்சாரத்தை கைவிடலாம். பின்னர் எந்தப் பிள்ளை எந்தப் பக்கம் தாவும் என்பது தெரியாது எனவும், பேரினவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை ஓரணியில் திரட்டும் இக்கால செயற்பாட்டின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து முற்றாக விலகி இருக்கமுடியாது என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment