Saturday, July 6, 2013

லேக்ஹவுஸ் நிறுவனம் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு 50 கோடி ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் - நீதிமன்றம் மீள் உறுதி

ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு சிலுமின பத்திரிகையில் பிரசுரமான செய்தியொன்றினால் அபகீர்த்தி ஏற்பட்டதாக தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கில் விஜேதாஸ ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்பட்டமைக்கு 50 கோடி ரூபா இழப்பீடு செலுத்துமாறு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, லேக்ஹவுஸ் நிறுவனம் சார்பாக எந்தவொரு அதிகாரியும் நீதிமன்றில் பிரசன்னமாகாத நிலையில் நீதவான் இழப்பீடு செலுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை இடம்பெற்ற தினத்தில் தமது அதிகாரிகளால் நீதிமன்றில் பிரசன்னமாக முடியாமல் போனதால் தீர்ப்பினை மீள்பரிசீலனை செய்யுமாறும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உத்தரவை இடைநிறுத்துமாறும், லேக்ஹவுஸ் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது

ஆயினும் லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை நேற்று மீண்டும் உறுதிசெய்துள்ளார்

விஜேதாஸ ராஜபக்ஸ பிரதம நீதியரசர் ஆவதற்கான கனவுடன் வாழ்வதாக சிலுமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த கட்டுரையொன்றில் தமக்கு அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து 50 கோடி ரூபா இழப்பீடு கோரி ஜனாதிபதி சடட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com