Thursday, June 27, 2013

யாழில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லீம்களின் ஆதங்கம்!

யாழ் மாவட்ட முஸ்லிம் ஒருவரின் பாழடைந்த கிணற்றி லிருந்து அண்மையில் இராணுவத்தால் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பாக சில இணையத்தளங்கள், பத்திரி கைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியீட்டு வருகின்றன எனவும் இவ்வாறான செய்திகள் திரிவு படுத்தப்பட்டமை என தெரிவித்து முஸ்லீம்கள் தங்களது ஆதங்கத்கங்களை தெரிவித்துள்ளனர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

சியானாஸ் தாஹிர் (தலைவர் கே.கே.எஸ் வீதி முகம்மதியாத் மஸ்ஜீத்)

முஸ்லீம் வட்டாரத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து சில பத்திரிகைகள் திரிபடுத்திய செய்தியை வெளியிட்டுள்ளன. அதுவும் கிழக்குத்தீவிரவாத அமைப்புக்கும் மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கு தொடர்புள்ளதாகவும், எதிர்வரும் மாகாண சபை தேர்தலையும் தொடர்புபடுத்தி கூறப்பட்டுள்ளது. இதற்கும் யாழ் முஸ்லிம்களும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்தச் செய்தி மொட்டத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு செயலாகவே கருதுகிறோம். முஸ்லீம் தமிழ் சகோதரர்களை சீண்டும் இவ்வாறான செய்திகள் தவிர்க்கப்படவேண்டும். இப்போது யாழில் எல்லா இரும்புக்கடைகளிலும் கைவிடப்பட்ட ஷெல் குழாய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறான ஷெல் பொருட்கள் இராணுவத்தால் கைவிடப்பட்டவையாகும். இவைகள் கழிவுப்பொருட்கள் என்ற ரிதியில் அவர்களே வெளியே போடுகின்றனர். இது சாதாரண விடயமே. எனவே அநாவசியமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி செய்திகளை திரிவு படுத்தவேண்டாம் என கேட்டுக் கொள்வதுடன், எமது பள்ளிவாசல் நிர்வாகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி உண்மை செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.

கே.எம்.நிலாம் (சமூக சேவகர், அல் அஸ்ஹர் முன்பள்ளி ஸ்தாபகர்)

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வெடிபொருட்கள் பழைமை வாய்ந்தவை. 10 வருடங்களுக்கு முன்னர் பாழடைந்த கிணற்றில் போடப்பட்டிருந்தவை. இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்படுவது வடகிழக்கில் புதிதல்ல என்பதை உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கைவிடப்பட்ட இவ்வாறான ஆயுதங்கள் தற்போது மீட்கப்படுவது சாதாரண விடயம். இதனை வேறு கோணங்களில் சோடித்து தற்போது உள்ள சமாதான சூழலை குழப்பவேண்டாம் என கேட்டுக்கொள்வதுடன், ஊடக தர்மத்துடன் தற்களது செய்திகளை வெளியிடுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

மௌலவி எம்.ஐ மஹ்முத் பலாஹி (பேஷ் இமாம்-முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல்)

குறித்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்ட திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை கேட்டு கவலை அடைந்தேன். ஏனெனில் மக்களுக்கு நல்ல விடயங்களை கூற வேண்டிய இவைகள் ஏன் இப்படி செய்கின்றன என கவலை அடைந்தேன். ஊடகங்கள் அதன் தர்மத்தை கடைபிடித்து செய்திகளை வெளியிட வேண்டும். இனங்களுக்கிடையே மனக்கசப்பை வளர்ப்பது ஊடக தர்மமாகாது.

மனிதம், மனித நேயம் ஊடகங்களுக்கு தேவை. இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது ஊடகவியலாளர்கள் சமூகநலனை கருதி செயற்பட வேண்டும். தற்போதைய சூழலில் சகல மக்களும் சமாதானமாக வாழ்கின்றனர். ஆனால் சில ஊடகங்கள் இந்நிலைமையை குழப்ப்புவதன் ஊடாக பயங்கரவாதத்தை மேற்கொள்கின்றன. மேலும் இவ்வாறான ஊடகங்களே மேற்படி செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுகின்றன. இச்செய்திகள் வட முஸ்லீம்கள் மீள குடியமர்வதை விரும்பாததன் காரணமாக இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்றன. இதனை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் புரிந்துகொண்டு மக்களின் அக்கறையில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாப் எம்.எல் லாபீர்(தலைவர் -பெரிய முகைதீன் ஜும்மா மஸ்ஜீத், ஊடகவியலாளர்)

மேற்படி செய்தி தொடர்பாக குடாநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. ஏனெனில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏற்கக்கூடியதல்ல. பிழையான தகவல்களை வெளியிடும் இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்களா என என்னத் தோன்றுகிறது. கைவிடப்பட்ட ஆயுதங்கள் எடுக்கப்படுவது புதிய விடயமல்ல. புதிய கண்டுபிடிப்பு போன்று முஸ்லீம் பகுதி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. இவ்விடயத்தை நியாயப்படுத்த முடியாது. இங்குள்ள முஸ்லிம்கள் தற்போதைய சமாதான சூழலை குழப்புவதாக இல்லை. எனவே செய்தியை திரிவுபடுத்தி வெளியிடும் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். சு.மு.சுவர்கஹான் (பொதுச்செயலாளர் யாழ் கிளிநெச்சி முஸ்லிம் சம்மேளனம்)

26.06.2013 அன்று வெளியான நாளிதழில் 'முஸ்லிம் தீவிரவாதிகளால் வடக்கிற்கு வெடிபொருட்கள்' என்ற தலைப்பில் அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்டசெய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதுமட்டுமன்றி எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினையும் சுட்டிக்காட்டி'தேர்தல் களத்தில் பயன்படுத்துவதற்காக கிழக்குமாகாணத்தில் இருந்து முஸ்லிம் தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்டது'என்ற ஆதாரமற்ற இப்பொய்யான கூற்றினை யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் வண்மையாகக் கண்டிக்கின்றது.

அஷ்ஷெய்க் பி.எஸ் சுபியான் மௌலவி (யாழ் மாநகர சபை உறுப்பினர், மக்கள் பணிமனை தலைவர்)

முஸ்லீம் பகுதியில் பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்ட ஷெல் வெடிபொருட்கள் அண்மையில் வீட்டு உரிமையாளரால் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. இதுவே உண்மையான செய்தி. இந்த செய்தியை பல செய்தி ஊடகங்கள் பல கோணங்களில் திரிவுபடுத்தி செய்தியை வெளியிட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயம். யாழ் மாவட்டத்தில் 30 வருடங்களின் பின்னர் முஸ்லீம்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இனங்களுக்கிடையில் குரோதங்களை தூண்டக் கூடிய வகையில் இவ்வாறான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment