Sunday, June 30, 2013

பெண் சப்-இன்ஸ்பெக்டரை காதலித்து ஏமாற்றிய குன்னூர் நீதிபதி கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொலிஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட நீதிபதி, பல்லடம், குன்னூர் பொலிஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

வக்கீலாக பணியாற்றிய தங்கராஜ் என்பவர் என்னைக் காதலித்தார். என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நானும் அதனை நம்பி அவரை காதலித்தேன். இந்த நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது.

தற்போது அவர் குன்னூரில் உள்ள கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு கிடைத்ததும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக பல்லடம் பொலிஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், மாஜிஸ்திரேட்டு தங்கராஜூக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததும், தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று தங்கராஜை அவினாசி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தங்கராஜை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தங்கராஜை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன் அனுமதியின்றி நீதிபதியை கைது செய்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும் என்று முன்னாள் நிதிபதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment